2011 உலகக்கோப்பை இறுதியில் யுவராஜுக்கு முன் தோனி இறங்கியது ஏன்? சேவாக் சொல்லும் ரகசியம்
Recommended Video

மும்பை : 2011 உலகக்கோப்பையை இந்தியா வென்றதை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா தன் இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.
அந்த தொடரில் பல மலரும் நினைவுகளை இப்போது நினைத்தாலும் நம் மனதுக்கு இதமாக இருக்கும். அதிலும் நம் அனைவருக்கும் பிடித்த யுவராஜ் சிங், அந்த தொடர் முழுவதும் உச்சகட்ட பார்மில் இருந்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் இலங்கை அடித்த 274 ரன்களை துரத்திய இந்திய அணியில் அன்று யுவராஜுக்கு முன்பு தோனி களமிறங்கினார். அது ஏன் என பல கதைகள் இருந்தாலும், சேவாக் சொல்லும் ஒரு விஷயம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

அன்று நின்று ஆடிய யுவராஜ்
யுவராஜ் எத்தனையோ முறை நாம் நின்று ஆடுவார் என நினைக்கும் போது கேட்ச் கொடுத்து வெளியேறிவிடுவார். ஆனால், அந்த தொடரில் அவர் நின்று ஆடினார். பந்துவீச்சிலும் கை கொடுத்தார். அந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகனும் யுவராஜ் தான்.

முந்திக் கொண்டு வந்த தோனி
ஆனால், இறுதிப் போட்டியில் இந்தியா 114-3 என பாதிக் கிணறு கூட தாண்டாத நிலையில் இருந்த போது, யுவராஜை முந்திக் கொண்டு தோனி ஐந்தாம் இடத்தில் களமிறங்கினார். தோனி கேப்டன் என்றாலும் ஏன் பார்மில் உள்ள வீரரின் பேட்டிங் இடத்தை மாற்றுகிறார். அதுவும் தான் இறங்க அப்படி செய்தாரா? என்ற கேள்விகள் அப்போது எழுந்தாலும், அன்று தோனி ஒரு கலக்கு கலக்கி கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இன்னும் சொல்லப் போனால், தோனி எடுத்த முடிவு தான் சரி என பலரும் இதை பாராட்டி வந்தார்கள். உண்மையில் அன்று நடந்தது என்ன?

சேவாக் சொல்லும் ரகசியம்
இதற்கான காரணம் என ஒன்று கூறப்பட்டது. பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ஆலோசனைப்படி தான் அன்று தோனி முன்னே களமிறங்கினார் என்ற தகவல் பரவியது. ஆனால், சேவாக் அதை மறுத்துள்ளார். சச்சின் சொன்ன யோசனை தான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்கிறார் சேவாக். அன்று பெற்ற வெற்றியிலும், சச்சின் சொன்ன இந்த யோசனை தான் பெரும் பங்கு வகித்தது என்கிறார் சேவாக்.

சச்சின் என்ன சொன்னார்?
சேவாக் சொன்னது இதுதான். அன்று இலங்கை 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அடுத்து ஆடிய இந்தியாவில் சேவாக் 0, டெண்டுல்கர் 18 என மலிங்கா பந்தில் அடுத்தடுத்து வெளியேறினர். கம்பீர் மற்றும் கோலி ஆடி வந்தனர். அப்போது, வீரர்கள் அறையில் இருந்த சச்சின், தோனியிடம், "இடது கை அவுட்டானால் இடது கை போகட்டும், வலது கை அவுட்டானால் வலது கை போகட்டும்" என கூறி விட்டு குளிக்க சென்றுவிட்டார்.

வலது கை அவுட்டானது
சச்சின் சொன்னது போல வலது கை பேட்ஸ்மேன் கோலி ஆட்டமிழந்த உடன், அடுத்த வலது கை பேட்ஸ்மேன் தோனி சென்றுவிட்டார். ஒருவேளை கம்பீர் அவுட் ஆகி இருந்தால் அன்று யுவராஜ் தான் இறங்கி இருப்பார். இந்த முடிவை சச்சின் சொல்லக் காரணம், அன்று இலங்கையின் மலிங்கா நல்ல பார்மில் இருந்தார். இலங்கை பந்துவீச்சை சோதிக்க வேண்டுமென்றால், இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் களத்தில் நிற்பது தான் சரி என அனுபவ சச்சின் இந்த முடிவை எடுத்தார். அவர் எடுத்தது அன்று உண்மையானது.


Click it and Unblock the Notifications