சென்னை: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரிலிருந்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், "அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட்டுச் சென்றிருக்கவே கூடாது" என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மற்ற அணிகளில் விளையாடியபோது அஸ்வின் ஒருபோதும் நிலைத்ததாக உணரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்வதாக அஸ்வின் அறிவித்தார். சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் எனப் பல அணிகளுக்காக விளையாடியிருந்தாலும், அவரது பொற்காலம் என்பது சிஎஸ்கே-வுடனான பயணம்தான். 2010 மற்றும் 2011-ல் சிஎஸ்கே கோப்பையை வென்றபோது, அந்த வெற்றிகளில் அஸ்வினின் பங்கு அளப்பரியது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசிய ஏபி டிவில்லியர்ஸ், "அஸ்வினுடையது ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் பயணம். அவர் ஒரு அற்புதமான வீரர். அவரை நான் ஆட்டத்தின் விஞ்ஞானி, மருத்துவர், பேராசிரியர் என்றுதான் சொல்வேன். கிரிக்கெட் விதிகளின் எல்லை வரை சென்று அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அவரது திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்" என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல ஆண்டுகளாக இந்திய அணிக்கும், சிஎஸ்கே-வுக்கும் பல வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறார். அவர் மற்ற அணிகளுக்காக விளையாடியிருந்தாலும், அந்த அணிகளில் அவர் ஒருபோதும் நிலைத்ததாக நான் உணரவில்லை. என் கருத்துப்படி, அவர் எப்போதும் சிஎஸ்கே-விலேயே இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக, அது அவர் கையில் மட்டும் இல்லை. ஏலம், தக்கவைப்பு விதிகள் எனப் பல விஷயங்கள் இதில் அடங்கும். ஆனாலும், நான் எப்போதும் அஸ்வினை ஒரு மஞ்சள் ஜெர்சி வீரராகத்தான் நினைவுகூர்வேன்" என்று குறிப்பிட்டார்.
2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில், முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை வீழ்த்தி, சிஎஸ்கே-யின் வெற்றிக்கு அஸ்வின் வித்திட்டதை மறக்க முடியாது.
மேலும், அஸ்வினின் பேட்டிங் திறமை குறித்தும் பேசிய டிவில்லியர்ஸ், "பேட்டிங்கில் அஸ்வின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு வீரர். அவரது பேட்டிங் திறமை பற்றி அதிகம் பேசப்படவில்லை. இந்திய அணி சிக்கலில் இருக்கும்போதெல்லாம், அவர் தனது பேட்டிங்கால் அணியைக் காப்பாற்றியிருக்கிறார்" என்றார்.
2008 முதல் 2015 வரை சிஎஸ்கே-வுக்காக விளையாடிய அஸ்வின், அதன்பிறகு பல அணிகளுக்குச் சென்று, இறுதியாக 2025-ல் மீண்டும் தாய் வீடான சிஎஸ்கே-வுக்கு திரும்பி, தனது ஐபிஎல் வாழ்க்கையை நிறைவு செய்தார். அவர் தனது ஐபிஎல் பயணத்தில் 221 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.