"வீட்டுக்குப் போ".. வைபவ் சூர்யவன்ஷி கோபப்பட காரணமே இந்த வார்த்தைதான்..இலங்கை வீரர் மோதல் பின்னணி
தம்புள்ளா: இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி கையால் இலங்கை வீரரை தள்ளியது சர்ச்சையாக மாறியது. இந்த மோதலுக்கு, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே கூறிய வார்த்தைகளே காரணம் என்ற பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தம்புள்ளாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், சூப்பர் ஓவர் முடிவில் இலங்கை அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு, மைதானத்தை விட்டு வெளியேறிய 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே, "போட்டி முடிந்துவிட்டது... இனி நீ வீட்டுக்குப் போ!" என்று வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, அந்த வீரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி விதிப்படி தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த மோதலுக்குப் பின், இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிலும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாத போதும் இந்த சூப்பர் ஓவர் நடத்தப்பட்டதால், இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சில இலங்கை வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உண்மையில், போட்டி 265 ரன்களுடன் டையில் முடிந்ததும், போதிய வெளிச்சமின்மையால் இலங்கை அணி விளையாட மறுத்தது. ஆனால், இந்திய கேப்டன் திலக் வர்மா வற்புறுத்தியதால்தான் நடுவர்கள் சூப்பர் ஓவரை நடத்தினர். வெளிச்சம் மிக மோசமடைந்த போதும் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தவில்லை. இது குறித்துப் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், "இங்கு சூப்பர் ஓவர் ஆட்டத்தை நடத்தியிருக்கவே கூடாது" என்றார்.
இப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு நடுவர்களின் மற்றொரு சர்ச்சைக்குரிய முடிவும் முக்கிய காரணமாகும். இந்திய ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாம் பிட்ச்சின் ஆபத்தான பகுதியில் ஓடியதாகக் கூறி, நடுவர்கள் பிரகீத் ரம்புக்வெல்லா மற்றும் சாந்தா பொன்சேகா ஆகியோர் இந்திய அணிக்கு 10 ரன்கள் அபராதம் விதித்தனர்.
இதனால், இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு முன்பே அவர்களது கணக்கில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த 10 ரன்களே இறுதியில் ஆட்டம் டையில் முடிவதற்கும், இந்தியாவின் தோல்விக்கும் முக்கிய காரணியாக அமைந்தது.


Click it and Unblock the Notifications
