
இந்தியா செய்தது என்ன?
நேற்று (ஆக.25) காலையில் இருந்தே வெயிலும், மேகமூட்டமும் மாறி மாறி ஹெட்டிங்லேவில் இருந்தது. இருந்தாலும், வெயில் சற்று அதிக மார்க் வாங்கியது. இதனால், யார் டாஸ் வென்றாலும் பேட்டிங் தேர்வு செய்வார்கள் என்றே கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, ராஜ ராஜ சோழன் காலத்துக்கு பிறகு, கேப்டன் விராட் கோலி இந்தியாவுக்காக டாஸ் வென்றார். இந்த சாதனையை அவரே நம்பவில்லை. "நானா டாஸ் வென்றேன்!?" என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். பிறகு, சற்றும் யோசிக்காமல் எக்ஸ்பெர்ட்ஸ் கணித்தது போலவே பேட்டிங்கை தேர்வு செய்தார் கோலி. நல்ல முடிவாகவே அனைவரும் எண்ணினர். உண்மையில் அது நல்ல முடிவும் கூட. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும், 'நாங்கள் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம்" என்றார்.

இந்தியா தடுமாறியது ஏன்?
எல்லாம் நன்றாகவே சென்றுக் கொண்டிருந்தது. தொடக்க வீரர்களாக ரோஹித், ராகுல் களமிறங்கினார்கள். ஃபுல் பாசிட்டிவிட்டி அங்கு இருந்தது. முதல் ஓவர் ஆண்டர்சன் வீச தயாரானார். முதல் பந்து நார்மலான ஒரு டெலிவரி. ரோஹித், ஏதோ ஒருநாள் போட்டியில் சிங்கிள் எடுப்பது போல், கேஷுவலாக தட்டிவிட்டு ஓடினார். ஆனால், அதன் பிறகு தான் போட்டியே ஆரம்பமானது. இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என பந்துகளை டர்ன் செய்தார் ஆண்டர்சன். பந்தும், "சொல்லுங்க எஜமான்" என்று பம்மிக் கொண்டு, ஆண்டர்சன் சொல்வதைக் கேட்க, நிலைமையை புரிந்து கொண்டார் ஆண்டர்சன். லோகேஷ் ராகுலும் நாட்டிங்கம் மற்றும் லார்ட்ஸில் கடைபிடித்த அசுரத்தனமான பொறுமையை இதில் கடைபிடிக்கவில்லை. பிட்ச் எப்படி ரியாக்ட் செய்கிறது என்று கணிப்பதற்குள் அவர் முதல் ஓவரிலேயே, ஆண்டர்சன் பந்தை டிரைவ் செய்ய முயன்றார், இது, அவர் முதல் இரு போட்டிகளிலும், முதல் ஓவரில் செய்யாத ஒரு முயற்சி. டிரைவ் செய்தார், பந்து அவரை எக்சிட் செய்தது. பேட்டை உரசிக் கொண்டு பட்லரிடம் தஞ்சம் அடைந்தது. ரன் கணக்கை தொடங்காமலேயே வெளியேறினார் ராகுல். இதை கவனித்த ரோஹித், கோடி ரூபாய் கொடுத்தாலும், ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடி விடக் கூடாது என்றே அந்த நொடியே முடிவு செய்திருப்பார் என்பது உறுதி.

உங்கள் அடையாளம் எங்கே?
அடுத்து களமிறங்கினார் புஜாரா. நான், இந்த போட்டியில் புஜாராவை குறை சொல்ல மாட்டேன். ஆனால், சொல்வேன். குழப்பமாக உள்ளதா? ஹெட்டிங்லே பிட்ச், நேற்று முதல் செஷனில் கொடுத்த ரியாக்ஷனில் எப்பேர்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் தடுமாறித்தான் போயிருப்பார். புஜாராவும் இதில் விதிவிலக்கல்ல. அதற்காக அவர் 1 ரன்னில் ஆண்டர்சன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி ஏமாற்றவிட்டார் என்று குறை சொல்ல மாட்டேன். ஆனால், அவரை ஏன் குறை சொல்வேன் தெரியுமா? இப்படிப்பட்ட கடுமையான பிட்சுகளில், செஷனில், சவாலான பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்வதால் தானே உங்கள் பெயருக்கு ஒரு அடையாளம் உள்ளது? அப்படியெனில், நேற்று நீங்கள் உங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி நின்றிருக்க வேண்டும் அல்லவா? மற்ற விக்கெட்டுகள் சரிந்திருந்தாலும், நீங்கள் கல்லு மாதிரி நின்றிருக்க வேண்டும் அல்லவா? அதுதானே உங்கள் அடையாளம்? அதற்காக குறை சொல்ல விரும்புகிறேன்.

ஃபார்முக்கு வர வாய்ப்பிருக்கா?
அடுத்து கேப்டன் கோலி. இவரைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவே விரும்பவில்லை. ஆனால், ஒன்று.. இவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இன்னும் விட்டுப்போகவில்லை. "டிரைவ் ஆட மாட்டேன்" என சத்தியம் செய்தால் அவர் ஃபார்முக்கு வரலாம். இல்லாவிட்டால் கடினம் தான். அதே ஆண்டர்சன் பந்தில், 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு ரஹானே 18, ரோஹித் 19, ரிஷப் பண்ட் 2, ஜடேஜா 4 என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் வெளியேற இந்திய அணி 78 ரன்களில் அடங்கியது. இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்த போதே, நாம் இந்தியா 100க்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என்று கணித்திருந்ததால், இந்த ஸ்கோர் நமக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை.

பேட்டிங் தேர்வு தவறா?
அதெல்லாம் ஒன்றுமே இல்லை. பேட்டிங் தேர்வு எல்லாம் சரியான முடிவு தான். ஆனால், பிட்ச் நேற்று யூ-டர்ன் அடித்தது தான் இந்தியாவுக்கு எதிராக அமைந்தது. பிட்ச் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என முதல் செஷனில் பந்துவீச்சாளர்களுக்கு "நண்பேன்டா" மோடில் கைக்கொடுத்தது. அதனை இங்கிலாந்து பவுலர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். மற்றொரு விஷயம், இந்திய அணி ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை என்று ஏதாவது ஒரு மேட்சில் பேட்டிங்கில் பெரும் சரிவை சந்திக்கும். பேட்டிங் சீர்குலையும். அப்படியொரு நாள், நேற்று இந்தியாவுக்கு அமைந்தது. எந்த பேட்ஸ்மேனாலும் நேற்று க்ளிக் ஆக முடியவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேல், இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் பெற்ற அவமானகரமான தோல்விக்கு பிறகு, உள்ளுக்குள் காயத்துடன் திரும்பி வந்தது. அதன் வெறியை நேற்று நாம் பார்க்க முடிந்தது. தோல்வியின் வடு, அதனால் ஏற்பட்டிருந்த உஷ்ணம், இந்திய பேட்டிங் கொலாப்ஸ், பிட்ச் கொடுத்த ட்விஸ்ட் என்று எல்லாமே நேற்று இந்தியாவுக்கு எதிராக அமைந்தது.

பிட்ச் யூ-டர்ன்
சரி.. என்ன பண்றது.. பவுலிங்கில் பார்த்துப்போம் என்று களமிறங்கிய இந்திய அணிக்கு, மற்றுமொரு ஏமாற்றமாய் அமைந்தது பந்துவீச்சு. இங்கிலாந்து ஓப்பனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹமீத் படேல் ஆகிய இருவரும் எந்தவித சிரமமும் இன்றி இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டனர். அவர்களது பேட்டிங் திறமை, வெறித்தனம் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். மீண்டும் ஒருமுறை பிட்ச் இந்த இடத்தில் யூ-டர்ன் அடித்தது. கடைசி இரண்டு செஷனும் பேட்டிங் செய்ய மிக அற்புதமான சூழலாக அமைந்தது. இந்திய பவுலர்கள் குட்டிக்கரணம் அடித்துப்பார்த்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 52 ரன்களும், ஹமீத் 60 ரன்களும் அடுத்து களத்தில் இருந்தனர். மீண்டும் சொல்கிறேன், இவர்களது திறமை என்பதைத் தாண்டி, பிட்ச் முழுக்க முழுக்க இவர்களுக்கு சப்போர்ட் செய்ய, எல்லாமே இந்தியாவுக்கு எதிராக சென்றது.

பொறுத்திருந்து பார்ப்போம்
இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நிமிடம் இந்த போட்டி இந்தியாவில் கைகளில் இல்லை என்று தான் கூற முடியும். இங்கிலாந்து மேற்கொண்டு 100 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானால் கூட அந்த அணியின் ஸ்கோர் 220. அதன் பிறகு இந்தியா மிகத் திறமையாக, அட்டகாசமாக பேட்டிங் செய்தாலும் 300 ரன்கள் அடிப்பது பெரிய விஷயம். அப்படியே அந்த 300 ரன்களை அடித்தாலும், இங்கிலாந்துக்கு 150 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்படும். ஒருவேளை, இந்திய பவுலர்கள், 2ம் செஷனில் ஏதும் மேஜிக் செய்து இங்கிலாந்தை 150க்குள் முடக்கினால், இந்தியா வெற்றிப் பெறலாம். இப்போதுள்ள இந்திய அணி எந்த நிமிடம் என்ன செய்யும் என்று யாரும் கணிக்க முடியாது. இந்த கணக்கு பலித்தாலும் பலிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











