டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அவரை மிஸ்டர் ஐசிசி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அந்தப் பட்டப் பெயர் கிடைக்க முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
ஷிகர் தவான் ஐசிசி ஒருநாள் போட்டி தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன் ஆவார். ஐசிசி ஒரு நாள் தொடர்களில் அவரது பேட்டிங் சராசரி 65க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இதுவே அதிகமாகும். அது மட்டுமின்றி தொடர்ந்து மூன்று ஐசிசி ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்து இருந்தார் ஷிகர் தவான். அவரால் தான் இந்தியா 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது.

2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் முதன்முதலாக அவரை அனைவரும் உற்று நோக்கத் துவங்கினர். 2013 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்தார். அந்தத் தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருந்த ஷிகர் தவான் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை முதன்முறையாக வென்று சாதித்து இருந்தது. அதன் பின்னர் நடந்த 2015 உலகக் கோப்பை தொடரிலும் ஷிகர் தவான் அதிக ரன் குவித்த இந்திய வீரராக இருந்தார். அந்தத் தொடரில் 8 போட்டிகளில் 412 ரன்கள் குவித்து இருந்தார்.
அடுத்து 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 போட்டிகளில் 338 ரன்கள் குவித்து அந்தத் தொடரில் ஒட்டுமொத்த அளவில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை செய்தார். அப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அவருக்கு அடுத்து இடம் பெற்று இருந்தனர்.
இதை அடுத்து ஷிகர் தவானை மிஸ்டர் ஐசிசி என ரசிகர்கள் அழைக்கத் துவங்கினர். தொடர்ந்து மூன்று ஐசிசி ஒரு நாள் தொடர்களில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக வலம் வந்தார். இரண்டு தொடர்களில் ஒட்டுமொத்த தொடரிலும் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார்.
ஷிகர் தவான் இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட்டில் ஏழு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்து இருக்கிறார். 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6793 ரன்கள் குவித்து இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 17 சதம் மற்றும் 39 அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.
கடைசியாக 2022 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடினார். 2018 பின் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல 2021 ஜூலையில் இலங்கை அணிக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் ஆடி இருந்தார். சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய துவக்க வீரர்களின் வரவால் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தனக்கு 38 வயதான நிலையில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.