மும்பை: பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் சில வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணி மற்றும் ஏசியன் கேம்ஸில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஏசியன் கேம்ஸில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு ருதுரஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, சிவம் துபே உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் இவர்கள் அனைவருமே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு பரிசீலனை செய்யப்பட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஐபிஎல் தொடரில் சோபிக்காத ராகுல் த்ரிப்பாட்டியையும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கு தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழுவினருக்கு பாராட்டுகள். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடவில்லை என்பதால், ராகுல் த்ரிப்பாட்டி சிறந்த வீரர் இல்லை என்று ஆகிடாது. அவர் ஏற்கனவே இந்திய அணிக்கு ஆடிய அனுபவம் உள்ளவர் என்பதால், அவரை தேர்வு செய்தது சரியான நடவடிக்கையாகும்.
ஆனால் தேர்வுக் குழுவினரின் இந்த நடவடிக்கை மட்டும் ஏன் தொடர்கிறது என்று புரியவில்லை. ஒவ்வொரு முறையும் இந்திய அணிக்கான வீரர்கள் நள்ளிரவில் அறிவிக்கப்படுகின்றனர். ஏசியன் கேம்ஸ்-க்கான இந்திய அணி கூட நள்ளிரவு 11 மணிக்கு தான் அறிவிக்கப்பட்டது. தேர்வுக் குழுவினர் காலை நேரங்களில் சந்தித்து மாலையில், தேர்வு செய்துள்ள வீரர்களை அறிவிக்கலாமே.
தேர்வுக் குழுவினர் புதிய திட்டத்துடன் இந்திய அணியை அறிவிக்கிறார்கள். செய்தியாளர்களையும் சந்திப்பதில்லை. இதற்கு பின், தேர்வு செய்த வீரர்களை பற்றியோ, தேர்வு செய்யாத வீரர்களை பற்றியோ எந்த விளக்கத்தையும் அளிக்க தேவையில்லை என்பதாலேயே நள்ளிரவில் இந்திய அணி அறிவிக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.