சென்னை: உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசியக் கோப்பைக்கு தேர்வாகிய 18 வீரர்களில் சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகியோரை தவிர்த்து மீதமுள்ள 15 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்திய அணியின் பேக் அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உலகக்கோப்பை அணியில் இருந்து சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகக்கோப்பை அணி குறித்தும் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் விவகாரம் குறித்து நட்சத்திரா வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் இடையில் எந்த போட்டியும் கிடையாது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கு அணியை தேர்வு செய்யும் போது கூட பேக் அப் விக்கெட் கீப்பர் தேர்வு செய்வார்கள். அதனால் இஷான் கிஷன் பேக் அப் விக்கெட் கீப்பர், மாற்று தொடக்க வீரர் மற்றும் மாற்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று ஏராளமான ரோல்களை செய்து வருகிறார்.
அதேபோல் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று பலரும் கூறிய நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான பிரஷரான நேரத்தில் சிறப்பாக ஆடி நிரூபித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இஷான் கிஷன் தனது திறமையை நிரூபித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய போதும் கூட அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
என்னை பொறுத்தவரை இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சூட்சமத்தை புரிந்துகொண்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். அதனால் தான் அவரால் சீராக ரன்கள் சேர்க்க முடிகிறது. அவரின் ஆட்டம் எப்படி இருக்குமோ அதில் மாற்ற முயற்சிக்காமல் ஆடினால் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெற முடியும் என்று கூறியுள்ளார்.