
மீண்டும் அணியில் இடம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 3வது டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஜடேஜா இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்பட்டது. ஆனால், சர்பிரைஸாக மீண்டும் ஜடேஜா அணியில் இடம் பிடித்தார். முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதாவது டாப் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

5வது விக்கெட்டுக்கு ஜடேஜா
க்றிஸ் வோக்ஸின் ஷாட் பிட்ச் பந்தில் ரோஹித் ஷர்மா, 11 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 39 ரன்களுக்கெல்லாம் இந்திய அணி 3 விக்கெட்டை இந்திய அணி இழந்துவிட்டது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால், இதில் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவெனில், ரவீந்திர ஜடேஜா 5வது வீரராக களமிறக்கப்பட்டுள்ளது தான். வழக்கமாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ரஹானே இம்முறை களமிறங்கவில்லை. அவருக்கு பதில், 7வது டவுனில் களமிறங்கவிருந்த ஜடேஜா களத்தில் இருக்கிறார். லன்ச்சுக்கு முன்பு வரை கேப்டன் விராட் கோலி 18 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சர்பிரைஸ் கொடுத்த ஜடேஜா
வழக்கமாக ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் ரஹானே, பேட் கட்டி ரெடியாக இருந்தபோதும் அவர் களமிறக்கப்படவில்லை. அதேபோல், ரிஷப் பண்ட் கூட பேட் எல்லாம் கட்டி ரெடியாக இருந்தார். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜடேஜாவை விறுவிறுவென களமிறங்கியது ரசிகர்கள், வர்ணனையாளர்கள்... ஏன்... இங்கிலாந்து வீரர்களுக்கே பெரும் சர்பிரைஸாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஜடேஜா மீதுள்ள அபார நம்பிக்கை தான். உண்மையில், அவர் இன்று 5வது வீரராக களமிறக்கப்பட்டுள்ளது அவருக்கு கிடைத்துள்ள அபார, அரிதான வாய்ப்பு என்று கூறலாம். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறை முச்சதம் அடித்தவர் ரவீந்திர ஜடேஜா என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும். அந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திறன் உடையவர் ஜடேஜா. அவருக்கான களம் இதுவரை சரியாக அமையவில்லை. இன்று அதற்கு நேரம் வந்துள்ளது.

அருமையான சூழல்
இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரையே எடுத்துக் கொள்ளுங்கள். முதல் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டுடன் பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பாக விளையாடியிருப்பார் ஜடேஜா. முதல் இன்னிங்ஸில் முக்கியமான நேரத்தில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய போது அரைசதம் அடித்திருப்பார். ஒரு நல்ல பேட்ஸ்மேன், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால், அதில் ஜடேஜாவின் ஆட்டமே வேற லெவலில் இருக்கும். அதற்கு அந்த முதல் இன்னிங்ஸே ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், அவரது போதாத காலம், அவர் 7வது டவுனில் இறங்குவதால், எப்போதும் பவுலர்களுடனேயே விளையாடும் சூழல் அவருக்கு ஏற்படுகிறது. இதனால், அவரால் தனது திறமையை முழுமையாக வெளிக்கொணர முடியவில்லை. இந்த நிலையில், இப்போது ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கேப்டன் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடும் சூழல். இதைவிட ஒரு அருமையான சூழல் அவருக்கு கிடைத்துவிடாது. மனிதர் நன்றாக இதை பயன்படுத்திக் கொண்டால், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு ரவுண்டு வரலாம்!


Click it and Unblock the Notifications











