
இந்தியா தோல்வி அடைந்தது
இந்தியா ஏற்கனவே 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இங்கிலாந்து அணியை டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வீழ்த்த இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனினும், இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றியது. இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

எல்லாம் அணிக்காக தான்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. அனுபவம் வாய்ந்த அவரை ஒரு முக்கிய போட்டியில் ஏன் ஆடவைக்கவில்லை? என்ற கேள்விக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அணிக்காக தான் அந்த முடிவை எடுத்தோம் என பதில் அளித்தார்

கேப்டன் சொன்ன விளக்கம்
அவர் கூறியது இது தான். "மிதாலியை எடுத்தோமா இல்லையா என்பது இங்கே முக்கியமல்ல. வெற்றிக்கு தேவையான கூட்டணி இருக்கிறதா என்பது தான் முக்கியம். என்ன முடிவு எடுக்கப்பட்டதோ அது அணிக்காக தான் எடுத்தோம். அதனால் எந்த கவலையும் இல்லை" என கூறினார் ஹர்மன்ப்ரீத்.

மிதாலியை நீக்க என்ன காரணம்?
மிதாலி ராஜ் இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். 3 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்து இருந்தார். அப்புறம் ஏன் மிதாலி ராஜை அரையிறுதி போட்டிக்கு எடுக்கவில்லை? இது தான் காரணம். மிதாலி ராஜ் பொறுமையாக ஆடும் வழக்கம் கொண்டவர். சில சமயம் மட்டுமே அதிரடியாக ஆடுவார். எனினும், ரன் குவிப்பதில் நல்ல பார்மில் தான் இருக்கிறார். மிதாலி அரைசதம் அடித்த போட்டிகளில் அணியின் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணம்.

மைதானம் தான் காரணம்
ஆனால், இந்தியா குரூப் சுற்றில் ஆடிய போட்டிகள் அனைத்தும் கயானா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானம் அதிரடி ஆட்டத்துக்கு கைகொடுக்கும். ஆனால், அரையிறுதிப் போட்டி நடந்த மைதானம் மிகவும் பொறுமையாக ரன் எடுக்கக்கூடிய ஆடுகளம் ஆகும். மிதாலி ராஜ் இந்த மைதானத்தில் ஆடி இருந்தால் நிச்சயம் இந்தியா நல்ல ரன்களை எடுத்திருக்கும் என கூறப்படுகிறது. இதனால், இந்திய மகளிர் அணி விமர்சனத்தை சந்தித்து வருகிறது.


Click it and Unblock the Notifications












