சென்னை: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா வரும் சூழலில் முகமது ஷமி பெஞ்ச் செய்யப்படுவது சரியா என்பது குறித்து பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிக்கு நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தயாராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணியுடன் களமிறங்கிய அதே அணியுடன் இந்திய அணி மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி விளையாடுவது உறுதி என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா வந்தால் முகமது ஷமி நீக்கப்படுவார் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. அதற்கு மாறாக ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியை சேர்த்து இந்திய அணி விளையாட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 3வது வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா தயாராகும் பட்சத்தில் பெஞ்சில் அமர வைக்கப்படுவதே சரியென்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்திய அணியின் டாப் ஆர்டர் எந்த நேரத்தில் சொதப்புவார்கள் என்பதே தெரியாது. தரமான பவுலிங் அட்டாக் அமையும் பட்சத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினால், கீழ் நிலையில் கேஎல் ராகுல் மட்டுமே பேட்ஸ்மேனாக இருப்பார். அவருக்கு ஹர்திக் பாண்டியா உறுதுணையாக இருப்பார் என்று பார்க்கப்பட்டாலும், இந்திய அணியின் பேட்டிங் வரிசை நம்பர் 7-லுடன் முடிவடைந்துவிடும். நம்பர் 8ல் குல்தீப் யாதவ், நம்பர் 9ல் ஷமி, தொடர்ந்து பும்ரா, சிராஜ் ஆகியோர் களமிறங்கினால் எதிரணிக்கு கூடுதல் சாதகம் ஏற்படும்.
இதனால் ஷர்துல் தாக்கூர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்வதால், எதிர்முனையில் ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் கூட முடிவை மாற்ற முடியும். அதேபோல் டெத் ஓவர்களில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாத காரணத்தால் முகமது ஷமியை எதிரணிகள் அட்டாக் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஷமியின் பணியை ஹர்திக் பாண்டியாவால் செய்ய முடியும் என்று இந்திய அணி நிர்வாகம் நம்புகிறது. அதனை ஹர்திக் பாண்டியாவும் செய்து வருகிறார். இதனால் நம்பர் 8ல் இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படுவதே சரியானதாகும்.