லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இருப்பினும் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து ரசிகர்களும், மீடியாவும் கிரிக்கெட்டின் புனிதத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் களங்கப்படுத்திவிட்டதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட் என்ற சொல் ரசிகர்களிடையே அதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டுக்கு எடுத்துக்காட்டாக எம்எஸ் தோனியின் செயலை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 2011ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்ஹம் டெஸ்ட் போட்டியில், இங்கி. வீரர் இயான் பெல் 137 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர்களால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் அடித்த ஷாட் பவுண்டரி லைனை எட்டியதாகக் கருதி, பெல் கிரீஸின் மறுமுனையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இந்திய வீரர் பிரவீன் குமார், பந்தை தடுத்து தோனியிடன் த்ரோ கொடுக்க பெல் ரன் அவுட் செய்யப்பட்டார். இதில் மூன்றாவது நடுவரும் இந்தியாவுக்குச் சாதகமாக முடிவெடுத்தார். இதனால் இயான் பெல்137 ரன்களில் விரக்தியுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் தோனி தலைமையிலான இந்தியா அணி, தேநீர் இடைவேளைக்குப் பிறகு அவரைத் திரும்ப அழைக்க முடிவு செய்தது. ஏனெனில் பெல் பவுண்டரி சென்று விட்டதாக எண்ணியே வெளியே நின்றார். இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் தோனிக்கும், இந்திய அணி முடிவுக்கும் பாராட்டு தெரிவித்தனர். ஆட்டமிழந்து வெளியேறிய பேட்ஸ்மேனை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்த தோனியின் முடிவுக்கு ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது.
ஓவர் முடிவடைந்துவிட்டதாக நினைத்து பேர்ஸ்டோவ் வெளியேறிய நிலையில், அலெக்ஸ் கேரியால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விதிகளின்படி செயல்பட்டனர். களத்தில் இருந்த நடுவர்கள் யாரும் ஓவர் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.