மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.
அதன்பின் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர், மீண்டும் கிரிக்கெட் களத்தில் திரும்பி பெரியளவில் சாதிக்க முடியவில்லை. இருப்பினும் யுவராஜ் சிங்கை போல் ஒரு ஆல் ரவுண்டர் இந்திய அணிக்கு இதுவரை கிடைக்கவில்லை. அதேபோல் யுவராஜ் சிங் விளையாடிய காலத்தில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

நடிகைகளுடன் டேட்டிங், காதல், பிரேக் அப் என்று ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியவர். அதுமட்டுமல்லாமல் இரவு முழுவதும் பார்ட்டி செய்வதில் இந்திய அணியில் யுவராஜ் சிங்கை போல் ஒருவர் இருக்கவே முடியாது என்று சொல்லப்படுவதுண்டு. முதல்முறையாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, யுவராஜ் சிங் ஹோட்டலில் இருந்து வெளியேறவிடாமல் தடுக்க கங்குலியே படாதபாடு பட்டிருக்கிறார்.
ஆனால் கங்குலியையும் மீறி யுவராஜ் சிங் இரவில் ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த அளவிற்கு யுவராஜ் சிங் பார்ட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் பயிற்சி, பேட்டிங், பவுலிங் என்று ஒழுக்கத்தை கடைபிடித்தாலும், யுவராஜ் சிங்கால் பார்ட்டிகளில் மட்டும் பங்கேற்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால் அதுவே யுவராஜ் சிங்கிற்கு பின் நாட்களில் எமனாக மாறியுள்ளது. டி20 உலகக்கோப்பை நடத்த ஐசிசி முடிவெடுத்த போது, சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் உள்ளிட்டோர் விலகிக் கொண்டனர். இதனால் சீனியர் வீரர்களான சேவாக் அல்லது யுவராஜ் சிங் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது, துணை கேப்டனாக யுவராஜ் சிங் தான் செயல்பட்டார். இதனால் யுவராஜ் சிங் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருந்த நிலையில், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் தோனி நியமிக்கப்பட்டார். இதற்கு யுவராஜ் சிங்கின் கோபம், ஒழுக்கம், பார்ட்டி, பிசிசிஐ நிர்வாகிகளுடனான மோதல், பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடனான மோதல் என்று ஏராளமான விவகாரங்கள் இருந்துள்ளன.
அதில் குறிப்பாக யுவராஜ் சிங் களத்திற்கு வெளியில் செயல்பட்ட விதமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட யுவராஜ் சிங்கிற்கு எதிர்மாறான குணங்களை கொண்டவர் தோனி. இரவு நேர பார்ட்டிகள், கோபம், பயிற்சிக்கு சரியான நேரத்தில் வருவது, பிசிசிஐ நிர்வாகிகளுடன் நல்ல உறவில் உள்ளது என்று அனைத்தையும் சரியான வகையில் செயல்பட்டதால் தோனிக்கு கேப்டன்சி செல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளது.