கான்யா: இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஷம்சி விளையாடினால் அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. சம பலம் இருக்கும் இரு அணிகள் மோதுவதால் இதில் போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அஸ்வின்: இதற்கிடையே இந்த இறுதிப் போட்டி தொடர்பாக நட்சத்திர வீரர் அஸ்வின் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். குறிப்பாகத் தென் ஆப்பிரிக்காவின் ஸ்பின்னர் ஷம்சி ஏன் அணியில் இருக்கத் தேவை இல்லை என்பதை விளக்கியுள்ளார். ஷம்சி அணியில் இருந்தால் அது இந்தியாவுக்குச் சாதகமாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார். கடந்த அரையிறுதி போட்டியில் ஷம்சி 3 விக்கெட் எடுத்த போதிலும் இந்த போட்டிக்கு அவர் செட் ஆக மாட்டார் என்றே அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். அதில் "ஷம்சி விக்கெட் எடுத்தாலும் ரன்களை லீக் செய்வார். அவர் இப்படிப் போடுவதால் தான் அவரால் தென் ஆப்பிரிக்க அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக கேஷவ் மகராஜை தென் ஆப்பிரிக்கா நம்பி எடுக்கிறார்கள்.
ஷம்சி: மறுபுறம் ஷம்சி ரன்களை லீக் செய்பவராகப் பார்க்கப்படுகிறார். மேலும், கேஷவ் மகராஜால் செய்யக் கூடியதை ஷம்சியால் செய்ய முடியாது. ஷம்சி பந்துகளில் வேகம் இல்லை. அவரால் பேட்ஸ்மேன்களை பேக் பூட்டில் தள்ளி ஆட வைக்க முடியாது. அவருக்கு டிபன்ஸ் ஆப்ஷனும் ரொம்பவே குறைவு. இதன் காரணமாகவே ஷம்சி பவுண்டரி போனாலும் பந்தை மேலே தூக்கிப் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் கேஷவ் மகராஜ் பந்துவீசும் போது அதை பேட்ஸ்மேன்களால் டவுன் தி கிரவுண்ட் (பேட்ஸ்மேன்களுக்கு நேர் எதிரில்) அடிக்க முடிவதில்லை. இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான ஸ்பின் பவுலர்களின் நிலை இதுதான். ஆனால், இந்தப் போட்டியில் பந்து சற்று பவுன்ஸ் ஆகும் என்பதால் டவுன் தி கிரவுன்டில் தான் கேஷவ் மகராஜ் பந்துவீச்சை அடிக்க வேண்டும்.
ஸ்வீப் செய்வது கடினம்: ஏனென்றால் மகராஜ் பந்துவீச்சை ஸ்வீப் ஆடுவது கடினம். மகராஜ் பந்துவீச்சில் கடந்த 2 போட்டிகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே ஸ்கொயர் ஆஃப் தி பிட்ச் (மேட்ஸ்மேன்களுக்கு பின்புறம்) திசையில் வந்துள்ளது. அவரது பந்து வேகமாக வரும் என்பதால் ஸ்வீப் ஷாட் ஆடுவது கடினம். அதேநேரம் ஷம்சி பந்தை மேலே தூக்கிப் போடுவதால் எளிதாக ஸ்வீப் செய்ய முடியும். நமது டீமில் ரோஹித், சூர்ய குமார் யாதவ், ஜடேஜா, அக்சர் என அனைவராலும் எளிதாக ஸ்வீப் செய்ய முடியும்.
அடில் ரசீத், லிவிங்ஸ்டன் போலச் சற்று வேகமாகப் போடுபவர்களிடம் கூட எளிதாக ஸ்வீப் ஷாட் ஆடி 39 ரன்கள் வரை இந்திய பேட்ஸ்மேன்களால் சேர்க்க முடிந்துள்ளது. எனவே, இதை அவர்கள் கருத்தில் கொண்டு ஷம்சிக்கு பதிலாக ஒட்னீல் பார்ட்மேன் உடன் விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன்.
பிரச்சினை இல்லை: ஷம்சியால் விக்கெட் எடுக்க முடியும் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்போது இருக்கும் இந்திய பேட்டிங் லைன் அப்பில் ஒரு விக்கெட், 2 விக்கெட் போனாலும் பிரச்சினை இல்லை.. ஷம்சியை அடித்தே ஆடுவார்கள். எனவே, ஷம்சி தென் ஆப்பிரிக்க டீமில் இருந்தால் இந்தியாவுக்கு அது சாதகம் தான்" என்றார்.