மும்பை: ஐபிஎல் தொடருக்கான ரீடென்ஷனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 6 வீரர்களை தக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜுரெல் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோரை தக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணி தரப்பில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தலா ரூ.18 கோடிக்கும், ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் தலா ரூ.14 கோடிக்கும், ஹெட்மயர் ரூ.11 கோடிக்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அன்-கேப்ட் வீரராக சந்தீப் சர்மா ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ராஜஸ்தான் அணியின் பர்ஸ் தொகையில் இருந்து ரூ.79 கோடி கழிந்துள்ளது. இதனால் மெகா ஏலத்தை அந்த அணி நிர்வாகம் வெறும் ரூ.41 கோடியுடன் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் அதிகபட்சமாக 2 வீரர்களை மட்டும் அதிக தொகை கொடுத்து வாங்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஜாஸ் பட்லர், சாஹல், போல்ட், அஸ்வின், ஆவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆர்டிஎம் கார்டும் இல்லாததால், இவர்களை மெகா ஏலத்தில் வாங்குவது எளிதாக இருக்காது. அதேபோல் ரீடென்ஷனில் ராஜஸ்தான் அணி ஒரேயொரு பவுலரை மட்டும் தக்க வைத்திருப்பதால், மெகா ஏலத்தில் பவுலர்களை வாங்குவதில் தான் அதிக கவனம் செலுத்தும் என்று பார்க்கப்படுகிறது.

சாஹல் மற்றும் போல்ட் ஆகியோருக்கு அந்த தொகையை செலவு செய்ய தயக்கம் காட்டாது என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரெல் இருவரையும் அதிக தொகை கொடுத்து தக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே சஞ்சு சாம்சனால் விக்கெட் கீப்பராக செயல்பட முடியும்.
துருவ் ஜுரெல் ஃபினிஷராக இருந்தாலும், ஹெட்மயரும் ஃபினிஷராகவே செயல்பட்டு வருகிறார். மெகா ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு தான் கிராக்கி அதிகம் இருக்கும். அதனால் ஹெட்மயர் போன்ற வீரர்களை ரூ.7 கோடி முதல் ரூ.9 கோடி வரை கொடுத்து எளிதாக ஒப்பந்தம் செய்திருக்கலாம். அல்லது ஆர்டிஎம் கார்டு மூலம் மீண்டும் வாங்கி இருக்கலாம்.

துருவ் ஜுரெல்-க்கும் இதே விதிகள் பொருந்தக் கூடியது தான். 2 ஆர்டிஎம் கார்டுகளுடன் மெகா ஏலத்திற்கு ராஜஸ்தான் அணி சென்றிருந்தால், குறைந்த தொகைக்கு சில வீரர்களை வாங்கிவிட்டு, பட்லர் அல்லது சாஹல் போன்ற வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி இருக்க முடியும். அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் அதிக தொகை கொடுத்து ரீடெய்ன் செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. மும்பை அணியை போல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கோடிகளை குறைத்திருந்தால், மெகா ஏலத்திற்கு பயன்பட்டிருக்கும்.