பெங்களூரு: ஆர்சிபி அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ரஜத் படிதர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மணிக்கு 140 கிமி வேகத்தில் பந்துவீசும் உள்ளூர் வீரரான வைசக் விஜய்குமாரை ஆர்சிபி அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் யார் அந்த வைசக் விஜய்குமார் என்பது பற்றி பார்க்கலாம்.
16ஆம் சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இதில் பெங்களூரு அணி விளையாடிய முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியிடம் மோசமான தோல்வியை ஆர்சிபி சந்தித்தது. இதற்கு மிடில் ஆர்டர் பலவீனமே காரணமாக பார்க்கப்படுகிறது.

அனுபவ வீரர் ரஜத் படிதர் இல்லாததால், மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல்லை நம்பியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி மற்றும் டூ பிளஸிஸ் இருவரையும் விக்கெட் வீழ்த்தினால், பெங்களூரு அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று எதிரணிகள் திட்டமிடுகின்றன. இந்த நிலையில் ரஜத் படிதருக்கு பதிலாக வைசக் விஜய்குமார் என்ற பந்துவீச்சாளரை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு சிராஜ், ஹர்சல் படேல் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் சீரற்ற செயல்பாடே காரணமாக உள்ளது. ஏனென்றால் இரு போட்டிகளில் ஆடிய ஆகாஷ் தீப் 5 ஓவர்களில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதேபோல் ஹர்சல் படேல், 7 ஓவர்கள் வீசி இதுவரை 81 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஸ்லோயர் பந்துகள் மட்டுமே இவரின் ஒரே ஆயுதமாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் எளிதாக ஹர்சலை விளாசுகின்றனர்.
இதனால் கர்நாடகா ரஞ்சி அணிக்காக ஆடும் வைசக் விஜய்குமாரை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 14 முதல்தர டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய்குமார், 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் எகானமி ரேட்டும் 6.92 மட்டுமே வைத்துள்ளார். குறிப்பாக நடராஜனை போல் டெத் ஓவர்கள் வீசுவதில் வல்லவர் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறியுள்ளனர். ஏனென்றால் சையத் முஷ்டாக் தொடரில் கர்நாடகா அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இதனால் ஆகாஷ் தீப்பிற்கு சரியான மாற்று வீரராக வைசக் விஜய்குமார் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மணிக்கு 140 கிமீ வேகத்தை குறைக்காமல் பந்துவீசும் திறன் கொண்டவர் விஜய்குமார் என்பதால், ஆர்சிபி நிர்வாகம் பேட்ஸ்மேனுக்கு பதிலாக பந்துவீச்சாளரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் விரைவில் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.