சென்னை: சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஷிவம் துபே டாப் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அடுத்தடுத்து 3 மூன்று சிக்சர்களை விளாசி அசத்தலாக ஒரு கேமியோ ஷிவம் துபே ஆடிச் சென்றார். குறிப்பாக ஷிவம் துபே அடித்த சிக்சர் 101 மீ தூரம் வரை சென்றது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதால், ஆயுஷ் படோனிக்கு பதில் கே கெளதம் அணியில் இடம்பெற்றுள்ளார். சிஎஸ்கே சார்பாக மீண்டும் அதே அணி களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக கான்வே - ருதுராஜ் இணை களமிறங்கியது. இருவரும் 2வது ஓவர் முதல் அதிரடியை தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசப்பட்டது. அதிலும் முன்னாள் சிஎஸ்கே வீரரான கிருஷ்ணப்பா கவுதம் வீசிய ஓவரில் ருதுராக் கெய்க்வாட் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் காரணமாக சென்னை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனால் கடந்தப் போட்டியில் மிஸ் செய்த சதத்தை சேப்பாக்கத்தில் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லக்னோ அணியின் ரவி பிஷ்னாய் வீசிய முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மொயின் அலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஷிவம் துபே களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்தப் போட்டியில் சென்னை அணியின் ரன் ரேட் குறைய காரணமாக இருந்த ஷிவம் துபே, இந்தப் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றதே ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரை டாப் ஆர்டரில் களமிறக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக ஷிவம் துபேவை தோனி அளவுக்கு அதிகமாக பேக் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற சென்னை அணியின் பயிற்சியில் ஷிவம் துபே சிறப்பாக எந்தவித பிரச்சனையும் இன்றி சிக்சர்களை விளாசினார்.
அதற்கேற்ப முதல் 10 பந்துகளில் ரன்கள் சேர்ப்பதில் சிரமத்தை சந்தித்த ஷிவம் துபே, ரவி பிஷ்னாய் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ஆச்சரியம் கொடுத்தார். அதேபோல் ஷிவம் துபே அடித்த சிக்சர் 101 மீ தூரம் வரை சென்றது. இதனால் பலரும் ஷிவம் துபேவை பாராட்டி வருகின்றனர். இறுதியாக 16 பந்துகளில் 27 ரன்கள் விளாசிய ஷிவம் துபே ஆட்டமிழந்து வெளியேறினார்.