கொழும்பு : சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது சிராஜ் இலங்கை மைதான ஊழியர்களுக்கு பணம் கொடுத்தது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.
இந்திய அணி வீரர் முகமது சிராஜ் தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதுக்கான பணம் சுமார் ரூ.4 லட்சத்தை இலங்கை மைதான ஊழியர்களுக்கு அளித்தார். மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சுமார் ரூ.41 லட்சம் அளித்தது.

இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகள் மழையால் தடைபட்ட போது மைதான ஊழியர்கள் கடுமையாக உழைத்து போட்டிகளை மழைக்கு நடுவே நடத்தி முடிக்க பெரும் உதவி செய்தனர்.
அவர்களுக்கு நிச்சயம் வெகுமதி அளிக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். இதை அடுத்து இறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்த போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, இலங்கையில் கடுமையாக உழைத்த மைதான ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து ரூ.41 லட்சத்தை (50,000 டாலர்) அளிக்க உள்ளதாக அறிவித்தார்.
அதே இறுதிப் போட்டியில் இந்தியா அதிரடியாக பந்து வீசி இலங்கை அணியை 50 ரன்களுக்கு சுருட்டியது. இந்திய வீரர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா ஆசிய கோப்பையை வென்ற பின் ஆட்டநாயகன் விருது முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.
அவர் தனக்கு வழங்கப்பட்ட ரூ.4 லட்சம் (5,000 டாலர்) பணத்தை இலங்கை மைதான ஊழியர்களுக்கு அளித்தார். இப்படி பிசிசிஐ செயலாளர் மற்றும் இந்திய வீரர் இலங்கை ஊழியர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு பணம் அளித்தது ஏன்? எனக் கேட்டு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதற்கு முன் இந்தியா, இலங்கைக்கு வந்துள்ளது. அப்போதும் மழை வந்துள்ளது. அப்போதும் இதே ஊழியர்கள் போட்டி நடக்க பெரும் உதவி செய்துள்ளார்கள். ஆனால், இதுவரை யாருமே அவர்களுக்கு பண வெகுமதி கொடுத்ததில்லை. அதன் பின் ஆட்டநாயகன் விருதுக்கான பணமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை மைதான ஊழியர்கள் இதுநாள் வரை சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இலங்கை நிர்வாகம் கூட அவர்களுக்கு பணம் கொடுத்ததில்லை. இது குறித்து ஊடகங்கள் விசாரணை செய்ய வேண்டும் என அர்ஜுன ரணதுங்கா பேசி இருக்கிறார்.
அவர் என்ன சொல்ல வருகிறார்? இலங்கை ஆடுகளங்கள் இந்தியாவுக்கு ஏற்றது போல மாற்றியதால் தான் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்றது என சொல்ல வருகிறாரா? அதை நேரடியாக சொல்லாமல் சர்ச்சையை மட்டும் கிளப்பி விட்டு இருக்கிறார் ரணதுங்கா. பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்குமா?