மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த வீரர்களுக்கு Hall of fame என்ற அந்தஸ்தை ஐசிசி வழங்கும். இது கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் ஆகும். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, மல்யுத்தம் என பல்வேறு விளையாட்டு பிரிவுகளிலும் ஹால் ஆப் பேம் அந்தஸ்து அந்தந்த போட்டியை நடத்தும் அமைப்பால் வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த சூழலில் விராட் கோலிக்கு இன்னும் அந்த ஹால் ஆப் பேம் அந்தஸ்து வழங்கப்படவில்லை.

ஆனால் தோனிக்கு அந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கரை விட ராகுல் டிராவிட்டுக்கு தான் முதலில் இந்த ஹால் ஆஃப் பேம் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை அப்போதே ஐசிசி வழங்கி இருந்தது.
அதாவது ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளானால் தான் இந்த ஆல் ஆஃப் ஃபேம் அந்தஸ்து வழங்கப்படும். தோனி 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், தற்போது 2025 ஆம் ஆண்டு அவருக்கு ஹால் ஆப் பேம் அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது.
இதே காரணமாக தான் சச்சின் 2013-ஆம் ஆண்டு தான் ஓய்வு பெற்றதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து ஹால் ஆப் பேம் கவுரவம் வழங்கப்பட்டது. தற்போது விராட் கோலி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். டி20 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடர்கிறார்.
இதனால் விராட் கோலி ஓய்வு பெற்று அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து தான் அவருக்கு ஹால் ஆப் பேம் அந்தஸ்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் கங்குலி, யுவராஜ், ஸ்ரீநாத், ஹர்பஜன் போன்ற வீரர்கள் இன்னும் அந்தஸ்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.