மும்பை: ஆசிய கோப்பை தொடர் இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. சில நாட்கள் முன்பு ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அதில், விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலிக்கு ஏன் ஓய்வளிக்கப்பட்டது என்ற காரணம் தேர்வாளர்களால் விளக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய அணி தேர்வாளர் பிரசாத், இது பற்றிய ஒரு தகவலை கூறி இருக்கிறார்.

வேலைப்பளு தான் காரணம்:
"கோலிக்கு அதிக வேலைப்பளு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஐபிஎல் முதல் தொடர்ந்து நீண்ட காலமாக ஆடி வருகிறார். அந்த வேலைப்பளு காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கிறது. நான் மூன்றாம் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்த போது அங்கே தான் இருந்தேன். அங்கே வேலைப்பளு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மூன்று வித கிரிக்கெட்டிலும் ஆடி வரும் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டது. அதை கோலியிடம் இருந்து துவங்கியுள்ளோம். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது" என கூறினார் பிரசாத்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில்:
விராட் கோலி ஆசிய கோப்பைக்கு அடுத்து நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கோப்பையில் வெல்லுமா?
இந்திய அணி, இங்கிலாந்தில் தோல்வி அடைந்து விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், ஆசிய கோப்பையில் வெற்றி பெற்று இந்திய அணி மீளுமா என பார்க்கலாம்.