பார்படாஸ் : இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்துள்ளார். இந்த தோல்வியின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக சார்லஸ் 38 ரன்களும், பவல் மற்றும் பூரன் தலா 36 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில அபாரமாக விளையாட தொடக்க வீரர் பில் சால்ட் 47 பந்துகளில் 5 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 87 ரன்களை விளாசினார். அதேபோல் ஜானி பேர்ஸ்டோவ் 26 பந்துகளில்48 ரன்களை விளாசி அசத்தினார்.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி கனவு பலிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பேசுகையில், பேட்டிங்கில் மொத்தமாக நாங்கள் 15 முதல் 20 ரன்களை வரை குறைவாக எடுத்துள்ளோம். அதேபோல் பவுலிங்கில் ஒரு குழுவாக இணைந்து சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும்.
பேட்டிங்கின் போது கடைசி 5 ஓவர்களில் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடி அதிக ரன்கள் சேர்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். அதற்கு இங்கிலாந்து பவுலிங்கிற்கு பாராட்டுகளை கொடுக்க வேண்டும். அவர்களின் திட்டத்தை களத்தில் சிறப்பாக செயல்படுத்தினார்கள். பிரண்டன் கிங் காயம் கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அடுத்த போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் எங்களுக்கு எதிராக களமிறங்கும் போதும் பில் சால்ட் காயத்தை ஏற்படுத்துகிறார். அவருக்கு எதிராக எங்களின் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எங்களின் தலையெழுத்து எங்கள் கைகளில் உள்ளது. அடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.