பிராவிடன்ஸ் : 2024 டி20 உலக கோப்பை தொடரில் தனது சொந்த நாட்டில் தனது முதல் போட்டியை ஆடிய வெஸ்ட் இண்டீஸ், கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பப்புவா நியூ கினியா 20 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
137 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. அந்த அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருந்ததால் எளிதாக 15 ஓவர்களில் வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால், அதற்கு மாறாக கடைசி 4 ஓவர்களில் 40 ரன்கள் அடித்தால் தான் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை கொண்டு சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. அப்போது அந்த அணி ஐந்து விக்கெட்களை இழந்து இருந்தது.

பின்னர் ஆண்ட்ரே ரஸ்ஸல் களமிறங்கினார். 17வது ஓவரில் ஒன்பது ரன்களும், 18வது ஓவரில் 18 ரன்களும், 19வது ஓவரில் 13 ரன்களும் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. சரியாக 19 ஓவர்களில் இலக்கை எட்டியது. 16 வது ஓவர் வரை போட்டியை அழுத்தத்துடன் எடுத்துச் சென்றது கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியா.
இந்த போட்டிக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பாவல் தங்கள் அணி சரியாக விளையாடவில்லை என புலம்பினார். "பப்புவா நியூ கினியா அணியின் திட்டம் எளிமையானதாக இருந்தது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆடினார்கள். எங்களுக்கு இரண்டு புள்ளிகள் வேண்டும் என்று மட்டும் நாங்கள் நினைத்தோம். அதைத் தான் நாங்கள் செய்தோம். பப்புவா நியூ கினியா 10 - 15 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட்டது. ஒரு பவுலிங் குழுவாக நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் கேப்டன் ஆக வந்ததிலிருந்து அணியில் இருக்கும் 70 - 80 சதவீதம் வீரர்கள் ஒன்றாகவே விளையாடி வருகிறோம். நாங்கள் எந்த அளவில் விளையாட வேண்டும் என நினைத்தோமோ, அதை செய்யவில்லை. நாங்கள் 60 முதல் 70 சதவீதம் வரை தான் நன்றாக ஆடினோம். எங்களது இரண்டாவது போட்டியில் அதை சரி செய்து கொள்வோம் என நினைக்கிறேன்" என்றார் ரோவ்மன் பாவல்.