ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி ஓவரில் 5 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், நட்சத்திர ஆல்ரவுண்டர் யான்சன் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.

இதன்பின் 136 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் டி காக் - ஹென்ரிக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி டி காக் அதிரடியாக தொடங்கினார். இதன்பின் ரஸ்ஸல் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே ஹென்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, கடைசி பந்தி டி காக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பெய்த மழையால், ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதன்பின் டிஎல்எஸ் விதிமுறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தில் என்ன நடக்கும் என்ற தெரியாததால் பரபரப்பு அதிகமானது. இதன்பின் மார்க்ரம் - ஸ்டப்ஸ் கூட்டணி களத்திற்கு வந்தது. ஸ்டப்ஸ் நிதானம் காட்ட, மார்க்ரம் ஒரு பக்கம் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாசிய அவரின் அதிரடியால், 5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 41 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் பவுலிங்கில் சிக்சரை அடிக்க முயன்று மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அதிரடி வீரர் கிளாசன் களம் புகுந்தார்.
அவரின் விக்கெட்டை வீழ்த்த மோட்டி அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரில் கிளாசன் 6, 4, 4, 4 என்று 20 ரன்களை விளாச, ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கைகள் ஓங்கியது. பின்னர் மீண்டும் அல்ஜாரி ஜோசப் வீசிய பவுன்சரில் கிளாசன் எட்ஜாக, அந்த பந்தை விக்கெட் கீப்பர் பூரன் அபாரமாக பிடித்து அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஸ்டப்ஸ் - மில்லர் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். திடீரென சேஸ் பவுலிங்கில் மில்லர் 4 ரன்களிலும், ஸ்டப்ஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியது. தொடர்ந்து யான்சன் - மஹாராஜ் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ராஸ்டன் சேஸ் வீசிய 16வது ஓவரில் மஹாராஜ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. மெகாய் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து யான்சன் வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது.