ஆன்டிகுவா : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடைந்த தோல்வி குறித்து கேப்டன் பவல் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மழைக் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை 16.1 ஓவர்களில் எட்டி தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது. வாழ்வா, சாவா போட்டியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் களத்தில் செய்த சில தவறுகளாலேயே தோல்வியை சந்தித்துள்ளது. முக்கியமான நேரத்தில் ரஸ்ஸல் ரன் அவுட்டாகியது, ஷம்சி பவுலிங்கை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்ததே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த தோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பேசுகையில், கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. விக்கெட்டுகளை கொத்து கொத்தாக விட்டுக் கொடுத்தோம்.
அப்படி நடக்கும் போது, கீழ் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகமாகும். அதேபோல் 135 ரன்கள் எடுத்த போதும், பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியும் போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடிய போது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் என்று தெரிவித்துள்ளார்.