ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ராஸ்டன் சேஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏற்கனவே டி20 தொடரை 2-0 என்ற கைப்பற்றியதால் பவல், ஷமார் ஜோசப் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
மழைக் காரணமாக இந்த போட்டி 13 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி சார்பாக ரிக்கல்டன் - ரீசா ஹென்ரிக்ஸ் கூட்டணி களமிறங்கியது. தொடக்கம் முதலே பொறுமையோ பொறுமை என்று விளையாடிய ரீசா ஹென்ரிக்ஸ் 20 பந்துகளில் ஒரேயொரு சிக்ஸ் உட்பட 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஏற்கனவே ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அதிரடி சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரீசா ஹென்ரிக்ஸ் தொடக்கத்திலேயே சொதப்ப, 5 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த கேப்டன் மார்க்ரம் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 24 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
பின்னர் கடைசி நேரத்தில் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 40 ரன்கள் எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு ரிவைஸ்ட் இலக்காக 116 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதனேஸ் - ஹோப் கூட்டணி களமிறங்கியது.
முதல் ஓவரின் 4வது பந்திலேயே அதனேஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தொடங்கினார். 2வது ஓவரை வீசிய வில்லியம்ஸ் பவுலிங்கில் பூரன் 2 சிக்சர்களை விளாச, மறுபக்கம் மபாகா பவுலிங்கில் 3 சிக்ஸ் உட்பட ஹோப் 22 ரன்களை விளாசி அசத்தினார். அதிரடியாக ஆடிய பூரன் 13 பந்துகளில் 4 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியாக ஹோப் - ஹெட்மயர் இருவரும் இணைந்து 9.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.