டம்புல்லா : இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய பதும் நிஷாங்கா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். குசல் மெண்டிஸ் 25 பந்துகளில் 26 ரன்கள் சேர்க்க குஷல் பெரேரா 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணியின் இளம் நட்சத்திர வீரர் கமிண்டூ மெண்டிஸ் 19 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் ரன்களை சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த இலக்கை விரைவில் எடுத்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இலங்கை அணி அபாரமாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ்க்கு கடும் நெருக்கடி கொடுத்தது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளரான தீக்ஷனா தன்னுடைய மாய சுழற்பந்துவீச்சை வீசி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டை வேட்டையாடினார்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரரான பிராண்டன் கிங் ஐந்து ரன்களும், ஈவன் லிவிஸ் 7 ரன்களும், ஆண்டிரூ பிளச்சர் நான்கு ரன்களும், ராஸ்டன் செஸ் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோமன் போவெல் 17 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அல்சாரி ஜோசப், பத்து பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி பதினாறு புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் 89 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சிஎஸ்கே வீரர் மகிஷ் தீக்சனா மூன்று புள்ளி ஒரு ஓவர் வீசி ஏழு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதேபோன்று மற்றொரு சிஎஸ்கே வீரரான பதிரானா, 2 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். மற்றொரு இலங்கை வீரர் வெல்லாலகே, நான்கு ஓவர்கள் வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடர் சமனிலையில் இருக்கின்றது.