மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும், 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இப்போட்டியில் சத்தமேயில்லாமல் உலக சாதனை படைத்துள்ளார் இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோணி.
ஜடேஜா பந்து வீச்சில், ஜேம்ஸ் ஃபால்க்னரை, டோணி ஸ்டம்பிங் செய்து அவுட் செய்தார். இதன்மூலம், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலுமாக சேர்த்து, டோணி மொத்தம் 140 ஸ்டம்பிங்குகளை செய்து அசத்தியுள்ளார். முன்னதாக, இலங்கை கீப்பர், குமார் சங்ககாரா 139 ஸ்டம்பிங்குகள் செய்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. டோணி ஸ்டம்பிங்கில் இன்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கையின் ரொமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தானின் மொயின் கான் 93 ஸ்டம்பிங்குகளுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 92 ஸ்டம்பிங்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
டோணி ஃபால்க்னரை ஸ்டம்பிங் செய்ததில் அதிருஷ்டமும் கலந்திருந்தது சிறப்பு. ஏனெனில், பந்தை டோணி பிடிக்காத நிலையில், அது டோணியின் கால் காப்பில் (பேட்) பட்டு ஸ்டம்பில் விழுந்து, ஃபால்க்னரை அவுட் செய்ய காரணமாக மாறியது. ஆட்டத்தில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.