
ஸ்பின்னர்கள்தான் மேட்ச் வின்னர்
சென்னையில் நாளை இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மிகப்பெரிய யுத்தத்தை தொடங்க போகிறார்கள். இதற்காக இரண்டு அணிகளிலும் தரமான சம்பவம் செய்யக்கூடிய வீரர்கள் உள்ளனர். இரு அணியிலும் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. பாஸ்ட் பவுலிங் துறையும் இரன்டு பக்கமும் பலமாக உள்ளது. ஆனால் இந்திய ஆடுகளத்தில் குறிப்பாக சென்னை ஆடுகளத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது ஸ்பின்னர்கள்தான்.

ஜாக் லீச் மீது நம்பிக்கை
காலம், காலமாக இந்தியா ஆடுகளத்தில் ஸ்பின்னர்கள்தான் கோலோச்சி வருகின்றனர். அதனால்தான் இந்தியா அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர்/ அக்சர் படேல் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் ஆட ரெடியாக உள்ளது. பாஸ்ட் பவுலிங்குக்கு புகழ்பெற்ற இங்கிலாந்தும், ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்திய தொடருக்கு 2, 3 ஸ்பின்னர்களை அழைத்து வந்து விடும். இங்கிலாந்து இந்த முறை இடதுகை ஸ்பின்னர் ஜாக் லீச் மற்றும் வலது கை ஸ்பின்னர் டான் பெஸ் ஆகியோரை களம் இறக்குகிறது. அதிலும் இடதுகை ஸ்பின்னர் ஜாக் லீச் மீது இங்கிலாந்து அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

ஏன்னா ராசி அப்படி
ஏனெனில் சுதந்திரத்துக்கு பிறகு இங்கிலாந்து இந்தியாவில் 3 முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1976-77-ல் 3-1, 1984-85-ல் 2-1 மற்றும் 2012-13 இல் 2-1 என்ற கணக்கில் இங்க்லாந்து வென்று இருந்தது. இந்த 3 தொடர்களிலும் வெல்ல காரணமாக இருந்தவர்கள் இடது கை ஸ்பின்னர்கள்தான். 2012-13-ல் மான்டி பனேசர்(17 விக்கெட்டுகள்), 1984-85-ல் பில் எட்மண்ட்ஸ் (14 விக்கெட்டுகள்) மற்றும் 1976-77-ல் டெரெக் அண்டர்வுட் (29 விக்கெட்டுகள்) அறுவடை செய்துளளனர். இவர்கள் அனைவருமே இடது கை ஸ்பின்னர்கள்தான்.

இடது கை ஸ்பின்னர்கள் ஆதிக்கம்
கடந்த 2000-க்குப் பிறகு இங்கிலானது இந்தியாவின் நான்கு சுற்றுப்பயணங்களில் ஒரு முறை மட்டுமே இடது கை ஸ்பின்னர்கள் கொண்டு வரவில்லை. கடந்த 2016-17 சுற்றுப்பயணத்தில் வலது கை ஸ்பின்னர்கள் அதில் ரஷீத், மொயீன் அலி ஆகியோர் சோபிக்காமல் போக இந்தியா 4-0 என்ற கணக்கில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனை மனதில் கொண்டுதான் இந்த முறை இடதுகை ஸ்பின்னர் ஜாக் லீச் மீது இங்கிலாந்தின் போகஸ் அதிகம் உள்ளது.

ஜாக் லீச்-டான் பெஸ் கூட்டணி அசத்துமா?
சமீபத்தில் நடந்த இலங்கை தொடரில் ஜாக் லீச்(10 விக்கெட்கள்), டான் பெஸ்(12 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தினர். இந்த தொடரிலும் ஜாக் லீச்-டான் பெஸ் கூட்டணி ஜொலிக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் அஸ்வின் தலைமையில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர்/ அக்சர் படேல் கலக்க உள்ள நிலையில் ஜாக் லீச்-டான் பெஸ் கூட்டணி அவர்களுக்கு போட்டியாக அசத்த உள்ளனர். மொத்தத்தில் இந்த தொடர் ஸ்பின்னர்களின் சொர்க்கபுரியாக திகழ உள்ளது.


Click it and Unblock the Notifications










