மும்பை : ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் மற்றொரு ஆல் -ரவுண்டர் அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், பிசிசிஐ பதறி அடித்துக் கொண்டு அதை மறுத்துள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா ஒரு விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முக்கிய ஆல் - ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தற்போது அணியில் இருந்து விலகி இருக்கிறார். உலகக்கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அணியின் முக்கிய வீரராக இருந்தார் பாண்டியா. மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், அந்தப் போட்டியில் பாதியில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்து நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இனி அடுத்து இந்தியா அரை இறுதி சுற்றுக்கு முன் லீக் சுற்றில் ஆடும் நான்கு போட்டிகளிலும் பாண்டியா அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன் கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆல் - ரவுண்டர் அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வலம் வந்தது. பாண்டியா ஆல் - ரவுண்டர் என்பதாலும், அவரால் அரை இறுதியில் கூட ஆட முடியுமா? என்பது உறுதியாக தெரியாததாலும் அவருக்கு இணையான ஆல் - ரவுண்டர் ஒருவரை அணியில் சேர்க்கலாமா? என்ற பேச்சு பிசிசிஐயில் இருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால், அக்சர் பட்டேலை சேர்க்க வேண்டும் என்றால் ஐசிசி விதிப்படி பாண்டியாவை நீக்கி விட்டு தான் அதை செய்ய முடியும். அதனால், கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா அரை இறுதி சுற்றுக்கு தயார் ஆனால் போதும். அதுவரை மற்ற வீரர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என பிசிசிஐயிடம் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், பாண்டியா வேகப் பந்துவீச்சாளர். அக்சர் பட்டேல் சுழற் பந்துவீச்சாளர். அதனால், இது சரியான மாற்றமாகவும் இருக்காது என ரோஹித் நினைத்து இருக்கலாம்.
இந்த தகவல் சில ஊடகங்களில் வெளியான நிலையில், பிசிசிஐ பதறி அடித்துக் கொண்டு மறுப்பு கூறி உள்ளது. பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், பாண்டியாவுக்கு நாங்கள் முதலில் நினைத்ததை விட மோசமான நிலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையில் இருக்கும் அவர், காயம் குணமாகாமல் அங்கிருந்து வெளியே வர முடியாது. அதே சமயம், பிசிசிஐ அவர் தயார் ஆகும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஒரு வாரம் அவர் ஓய்வில் தான் இருப்பார். அவர் மிக கவனமாக போட்டிக்கு தயார் செய்யப்படுவார் என கூறி இருக்கிறார்.