இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் அணியுடன் ஐசிசி போட்டிகளில் கூட விளையாடப்போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இரு நாட்டு போட்டிகளை நடத்த இந்தியா தயங்குவதால் பாகிஸ்தான் இந்த பதிலடி தந்திரத்தை கையில் எடுத்துள்ளது.
தீவிரவாத செயல்களை நிறுத்தாத பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, ஐசிசி நடத்தும் பொதுவான போட்டிகளை தவிர்த்து, இவ்விரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக மோதிக்கொள்வதில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் பாக். வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே இவ்விரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் போட்ட ஒப்பந்தப்படி, வரும் டிசம்பர் மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் இரு நாட்டு அணிகளும் சந்திக்கும் போட்டிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதுகுறித்து பாக். கிரிக்கெட் வாரியம் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பினாலும் இந்திய வாரியம் பின்வாங்கியபடியே உள்ளது.
மத்திய அரசு தனது நிலையை விட்டு இறங்கிவராத நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவையும் அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த தகராறில் தலையிட ஐசிசியும் மறுத்துவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷக்கார்யார் கான் இன்று இந்திய வாரியத்தை எச்சரிக்கும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய அணியுடன் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டிகளின்போதும் பாகிஸ்தான் ஆடாது" என்று கூறப்பட்டுள்ளது. மிரட்டல் தந்திரம் மூலம் இந்தியாவை இரு நாட்டு கிரிக்கெட் ஆட சம்மதிக்க செய்ய பாக். வாரியம் இதுபோல கூறியுள்ளது. எப்படியும், டிசம்பரில் இரு நாட்டு கிரிக்கெட்டை நடத்திவிட வேண்டும். அதில் குறிப்பிடத்தக்க லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று பாக். கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.