துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வென்ற நிலையில், இனி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முற்றிலுமாக ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு கிளம்பி உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்று, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையையும் வென்றது.
இந்த நிலையில்தான் இனி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படுமா? அல்லது முற்றிலுமாக கைவிடப்படுமா? என்ற விவாதம் எழுந்துள்ளது. ஏனெனில், தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரும்பாலான போட்டிகளின் போது மைதானம் காலியாகவே இருந்தது.

உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட அணியாக இருக்கும் இந்திய அணி ஆடிய போட்டிகளுக்கும் இதே நிலைதான் நடந்தது. இத்தனைக்கும் துபாயில் இந்தியர்கள் பலர் பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். அவர்கள் நிச்சயமாக இந்திய அணி ஆடும் போட்டிகளை நேரில் வந்து பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், துபாய் மைதானம் இந்திய அணி ஆடிய போட்டிகளின் போதும் காலியாகவே இருந்தது. அதிகபட்சமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு தான் அதிக அளவில் ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போதும் அதிக காலி இருக்கைகளை பார்க்க முடிந்தது.
இந்தியா, நியூசிலாந்து மோதிய இறுதிப் போட்டியிலும், இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய அரையிறுதி போட்டியின் போதும் துபாய் சர்வதேச மைதானம் காலியாகவே இருந்தது. சில ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அந்த மைதானத்தில் இருந்தனர்.
இந்தத் தொடரில் இந்தியா ஆடிய போட்டிகளை தவிர்த்து மற்ற அணிகளின் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றன. அங்கு மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டு பெரிய அளவில் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அங்கும் பாகிஸ்தான் ஆடிய போட்டிகள் உட்பட பல போட்டிகளின் போது மைதானம் காலியாக இருந்தது.
ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளை அதிக அளவில் மக்கள் விரும்புவதில்லை என்ற ஒரு வாதம் உள்ளது. ஒரு நாள் போட்டிகளையே ரத்து செய்துவிட்டு, டி20 போட்டிகளை மட்டும் நடத்தலாமா எனவும், ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களையும் இனி டி20 வடிவில் நடத்தலாமா எனவும் முன்னாள் வீரர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
டி20 போட்டிகளுக்கு எப்போதும் மைதானம் முழுமையாக நிரம்பி வழிகிறது. ஏனெனில், அது மூன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும். விறுவிறுப்பாகவும் இருக்கும். ஆனால், ஒரு நாள் போட்டி சுமார் 8 மணி நேரம் நடைபெறுவதால் ரசிகர்கள் இந்த வடிவத்தை விரும்பவில்லை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
அதே சமயம் சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை உள்ளிட்ட சர்வதேச ஒருநாள் தொடர்களுக்கு ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுமே பெரிய அளவில் உள்ளது. ஒருநாள் போட்டிகளை நடத்துவதற்கு அது மட்டுமே காரணமாக உள்ளது. ஆனால், ஒருநாள் தொடர்களில் கிடைக்கும் வருவாயை விட டி20 தொடர்களில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது என விளம்பர சந்தையை சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
2029ஆம் ஆண்டு அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா நடத்துவதற்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் தற்போது உள்ள நிலைமையில் அந்தத் தொடர் நடத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.