
புனே: மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சொந்த மைதானமாக கொண்ட மும்பையும், புனேயை சொந்த மைதானமாக தத்தெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளை மீண்டும் மோதுகின்றன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் புனேயில் நாளை நடக்கும் 27வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.

மும்பையில் நடந்த இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிஎஸ்கே திரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இரண்டாவது முறையாக நாளை மோத உள்ளன.
சிஎஸ்கே 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
புதிய சொந்த மைதானம் ரிப்பீட்டு ஆகுமா
வயதானவர்கள் அணியாகக் கூறப்படும் சிஎஸ்கே, இந்த சீசனில் சூப்பராக விளையாடி வருகிறது. அனைத்து ஆட்டங்களுமே கடைசி ஓவர் வரை திரில்லாக சென்றுள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி நடப்பு சாம்பியன் என்ற பெயருடன் களமிறங்கியது. ஆனால், இந்த சீசனின் மிகப் பெரிய சொதப்பல் அணியாக உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு சொந்த மாநிலமாக அமைந்துவிட்டது. அதே நேரத்தில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அதை சொந்த மைதானமாக சிஎஸ்கே மாற்றிக் கொண்டுள்ளது.
தத்தெடுத்த புதிய சொந்தமான புனேயில் விளையாடும் சிஎஸ்கே, சீசனின் முதல் ஆட்டத்தில் நடந்ததை ரிப்பீட்டு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.