
ஐதராபாத்: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை 49 சதங்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50வது சதத்தை அடிக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சாதனையைப் புரியப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. சீசனின் 20வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்துள்ளன. இந்த சீசனில் மிகவும் பலம் வாய்ந்த, வெற்றிகரமான அணிகளாக இரண்டு அணிகளும் உள்ளன.
கேப்டன் கூல் டோணி தலைமையிலான சிஎஸ்கே அணி இரண்டாண்டுகளுக்குப் பிறகு களமிறங்கியுள்ளது. சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பையை கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கொல்கத்தாவை கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை இழந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் அணியை வென்றுள்ளது.
ஐதராபாத் அணி, ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த சீசனில் சிஎஸ்கே இதுவரை விளையாடியுள்ள ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோ 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சாம் பில்லிங் 23 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் டோணி 44 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷேன் வாட்சன் 106 ரன்களும், சின்ன தல ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்களும் குவித்தனர்.
ஷேன் வாட்சன் இந்த சீசனின் 2வது சதத்தை அடித்ததுடன், ஐபிஎல் போட்டியில் 49வது சதத்தை பதிவு செய்தார். நாளை நடக்கும் போட்டியில், 50வது சதத்தை அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியில் இந்த சாதனையைப் புரியப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.