
வதந்திகள்
தோனி 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடிய போதே அவர் ஓய்வு பெறப் போவதாக வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. ஆனால், தோனி அப்போது ஓய்வை அறிவிக்கவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் தோனி பங்கேற்கவில்லை.

ஓய்வுக்கு பின் என்ன?
2020 ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகி வந்தார். இந்த நிலையில், சென்னையில் பயிற்சியில் பங்கேற்க வந்த தோனி, ஆகஸ்ட் 15 அன்று தன் ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வுக்கு பின் என்ன செய்யப் போகிறார்? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

தொடர்பு
பலரும் தோனி நேரடி அரசியலில் இறங்குவார் என்கிறார்கள். அதிலும் அவர் பாஜக கட்சியில் சேருவார் என்கிறார்கள். ஏன் பாஜக? தோனி - பாஜக இடையில் தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் வலம் வரக் காரணம் 2019 மக்களவை தேர்தல் தான்.

அமித் ஷா சந்திப்பு
ஆம், அப்போது பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது தோனியை சந்தித்து பேசினார். அப்போதே தோனி விரைவில் பாஜகவில் இணைவார் என்ற பேச்சு வலம் வந்தது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இணைவார் என்றார்கள்.

கட்டுக் கதைகள்
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன் பின் நடந்த ஜார்கண்ட் மாநில தேர்தலில் தோனி பாஜக சார்பாக பிரச்சாரம் செய்வார், போட்டியிடுவார் என்றெல்லாம் கட்டுக் கதைகள் கிளம்பின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.

தோனி பெயர் நீக்கம்
அடுத்து பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது தோனி பெயர் நீக்கப்பட்டது. அவர் ஆறு மாதமாக கிரிக்கெட் ஆடாததால் நீக்கப்பட்டதாக பிசிசிஐ கூறியது. ஆனால், சிலர் தோனி பாஜக சார்பாக தேர்தலில் பிரச்சாரம் செய்யாததால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினர்.

சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு
தோனி ஓய்வை அறிவித்த பின்னர் பாஜகவில் இருந்து தோனிக்கு அழைப்புகள், சமிஞ்ஞைகள் வரத் துவங்கின. அரசியலில் பல உள்விவகாரங்களை அறிந்தவரும், பாஜக எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி 2024 மக்களவை தேர்தலில் தோனி களமிறங்க வேண்டும் என கூறி உள்ளார்.

கம்பீரின் அதிரடி மாற்றம்
அதை விட ஆச்சரியம் கௌதம் கம்பீரின் அதிரடி மாற்றம் தான். கடந்த சில நாட்கள் முன்பு வரை தோனியை கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் தோனியை விமர்சிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம் எனும் நிலையே இருந்தது. அவர் தோனியின் ஓய்வுக்குப் பின் அதிரடியாக மாறி உள்ளார்.

புதிய பயணம்
நம் கிரிக்கெட் பயணம் ஏற்ற இறக்கத்துடன் ஒரே மாதிரியாக இருந்தது. இப்போது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள். என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். புதிய பயணம் குதூகலமாக இருக்கும். இங்கே டிஆர்எஸ்-க்கு எல்லையே இல்லை என கூறி உள்ளார். அதே போல 2011 உலகக்கோப்பை இறுதியில் தோனி அடித்த கடைசி சிக்ஸரை புகழ்ந்தும் பதிவிட்டுள்ளார்.

கம்பீர் எதைப் பற்றி சொல்கிறார்?
கம்பீர் தன் ஓய்வுக்கு பின் பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அவர் கிரிக்கெட் ஓய்வுக்கு பின் புதிய பயணம் குதூகலமாக இருக்கும் என தோனிக்கு எதைப் பற்றி கூறுகிறார்? என்பதை எளிதாக ஊகிக்கலாம். யார் என்ன சொன்னாலும், இப்போதைக்கு தோனியின் பதில் மௌனம் மட்டுமே.


Click it and Unblock the Notifications