2018இல் தோனி
தோனி கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டி பேட்டிங்கில் மிக மோசமான பதிவை விட்டுச் சென்றார். 13 இன்னிங்க்ஸ்களில் ஆடி 275 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும், பந்துகளை வீணடிக்கிறார் என்ற புகாரும் இருந்தது.
அப்படியே மாறியது
2019இல் இது அப்படியே மாறியது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து தெறிக்க விட்ட தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
உலகக்கோப்பையுடன் ஓய்வு
முன்பு தோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது. அது சரியான முடிவு தான் என்றும், அவர் அதற்கு முன்பே ஓய்வு பெற வேண்டும், இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் பலர் கூறி வந்தனர்.
தொடர்ந்து ஆட வேண்டும்
தற்போது தோனி உச்சகட்ட பார்மில் இருப்பதால், அவர் உலகக்கோப்பைக்கு பின்னும் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி ரசிகர்கள் உலகக்கோப்பைக்கு பின்னரும் தோனி டாப் பார்மில் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும் என கூறி வருகின்றனர்.
திசை மாற்ற வேண்டாம்
இது தொடர்பாக பேசிய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், இது பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. மிகப் பெரிய தொடருக்கு முன் இதை பற்றி பேசி திசை மாற்றாமல் இருப்பதே நல்லது. தற்போது அனைத்து ஆற்றலும் உலகக்கோப்பை நோக்கி தான் இருக்கிறது என கூறினார்.
அடுத்த விக்கெட் கீப்பரை தேடுகிறோம்
கடந்த ஆண்டில் தோனி பேட்டிங்கில் சரியாக ஆடாத போது தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பரை தேடுகிறோம் எனக் கூறிய பிரசாத், ரிஷப் பண்ட்டை அனைத்து வகை கிரிக்கெட்டிலும் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் உலகக்கோப்பைக்கு பின் தோனிக்கு மாற்றாக யார் வருவார் என நாங்கள் யோசித்து வருகிறோம் என்றும் கூறினார்.
ஓய்வை பற்றி பேசவில்லை
இரண்டு டி20 தொடர்களில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்போதும் அடுத்த விக்கெட் கீப்பரை தேடுகிறோம் எனக் கூறினார் பிரசாத். தற்போது தோனி பார்முக்கு வந்தவுடன், ஓய்வை பற்றி பேசவில்லை என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில், தோனியின் ஓய்வு முடிவு என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.