விசாகபட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம், ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 455 ரன்னும், இங்கிலாந்து 255 ரன்னும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 200 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 405 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் அலஸ்டர் குக் - ஹசீப் ஹமீத் முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக விளையாடினர். இருவரும் 50 ஓவர் தாக்குப்பிடித்து 75 ரன் சேர்த்தனர்.
ஹமீத் 25 ரன் (144 பந்து) எடுத்து அஷ்வின் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். குக் 54 ரன்னில் (188 பந்து) ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 5 ரன்னுடன் களத்தில் நின்றார். கை வசம் 8 விக்கெட் இருந்த நிலையில், வெற்றிக்கு கடைசி நாளில் 318 ரன் தேவை என்ற இலக்குடன் இங்கிலாந்து இன்று களமிறங்கியது.
ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 158 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது நினைவிருக்கலாம்.
2வது இன்னிங்சில், இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வினும், அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஜெயந்த் யாதவும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் கடைசி வரை போராடிய விக்கெட் கீப்பர் ஜானி பெய்ர்ஸ்டோ 40 பந்துகளில் 34 ரன்கள் விளாசி, அவுட்டாகாமல் களத்தில் நின்றார். இங்கிலாந்தின் கடைசி இரு விக்கெட்டுகளும் ஜெயந்த் யாதவின் அடுத்தடுத்த பந்துகளில் டி.ஆர்.எஸ் முறையில் பறிக்கப்பட்டன.