சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது சுற்றுப்பயணத்தை தொடருமா இல்லை தாயகம் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் இந்திய வீரர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிட்னி காபி ஹோட்டலுக்குள், தீவிரவாதிகள் புகுந்து பிணையக்கைதிகளை பிடித்துவைத்து பெரும் சண்டை நடைபெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் முடிந்துள்ள நிலையில், டிசம்பர் 17ம்தேதி பிரிஸ்பேனில் 2வது டெஸ்ட் போட்டியும், டிசம்பர் 26ம்தேதி மெல்பர்னில் 3வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சிட்னி நகரில் ஜனவரி 6ம்தேதி 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ள ஆஸ்திரேலியாவில் எப்போது எங்கு தாக்குதல் நடத்தப்படும் என்ற நிச்சயம் இல்லாத சூழ்நிலை நிலவுவதால், இந்திய அணி, தாயகம் திரும்ப வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பல ரசிகர்கள் இ-மெயில் அனுப்பியுள்ளனர். இதை பரிசீலித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
1996 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்தின. அப்போது விடுதலை புலிகள் அச்சுறுத்தல் இருப்பதால் நாங்கள் இலங்கை மண்ணிலேயே காலடி எடுத்து வைக்க மாட்டோம் என்று அறிவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அதேபோல இந்தியாவும் இப்போது முடிவெடுக்க வேண்டியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம் இந்திய வீரர்கள் தங்கியுள்ள பிரிஸ்பேன் நகர ஹோட்டலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளர் என்று தெரியப்படுத்தப்படாவிட்டாலும் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.