டெல்லி: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போல, ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக, ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் டி-20 போட்டித் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. உள்நாட்டைச் சேர்ந்த 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இதுபோலவே, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என பல நாடுகளில், டி-20 போட்டித் தொடர்கள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிலும், இதுபோல, உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அந்த நாட்டின் டெஸ்ட் அணிக்கு, இந்தியாவில்தான் பயிற்சி வழங்கப்படுகின்றன. மேலும், ஆப்கானிஸ்தானின் அறிமுக டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டி இந்தாண்டு அக்டோபர் 5 முதல் 24ம் தேதி வரை ஷார்ஜாவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளைச் சேர்ந்த 40 வீரர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இதில் இந்திய வீரர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் கோரிக்கையை பிசிசிஐ ஏற்காது என்று தெரிகிறது. இதுவரை, வெளிநாடுகளில் நடக்கும் எந்த டி-20 அணிகளுக்காகவும் விளையாட இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்ததில்லை.
ஹாங்காங் லீக் போட்டிகளில் பங்கேற்க யூசுப் பதானுக்கு கடந்தாண்டு பிசிசிஐ அனுமதி அளித்தது. ஆனால் இது உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. அதனால், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்காது என்றே தெரிகிறது.