செல்ம்ப்ஸ்போர்டு: இங்கிலாந்து கவுண்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிசந்திரன் அஸ்வின் காயமடைந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக கவுண்டி அணியான எசக்ஸ் உடனான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்துக்கு முன் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கையில் பந்து பட்டு அஸ்வின் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. சின்ன காயம் என்றாலும், முன்னெச்சரிக்கையாக இரண்டாவது நாள் ஆட்டத்தில் அஸ்வின் விளையாடவில்லை.
அதே நேரத்தில் உணவு இடைவேளையின்போது வலைப் பயிற்சியில் அவர் பங்கேற்றார். அஸ்வினுக்கு சிறிய காயம்தான். டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தயாராகிவிடுவார் என அணி நிர்வாகம் கூறியுள்ளது.
ஏற்கனவே விருத்தமான் சாகா தோள்பட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் அணியில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட மாட்டார். உடல்தகுதி தேறினால் இரண்டாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பு உள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார், காயம் காரணமாக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ள, அனுபவமுள்ள அஸ்வினுக்கும் காயமேற்பட்டது, பின்னடைவாக பார்க்கப்பட்டது. சிறிய காயம்தான், அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.