உலகக்கோப்பை கனவு
இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறது. உலகக்கோப்பைக்கு முன்னதாக கடைசி ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடவுள்ளது. இந்த தொடரில் ராகுலுக்கு வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, ராகுலின் உலகக்கோப்பை கனவு நனவாகும்.
ராகுல் இடை நீக்கம்
ராகுல் கடந்த ஆண்டு மோசமான பார்மில் இருந்தார். அப்படி இருந்தும் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார். ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்னதாக ராகுல் மற்றும் பண்டியா, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இடம் சந்தேகம்
இடை நீக்கத்தில் இருந்து வெளி வந்த போது பண்டியா இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால், ராகுல் பார்ம் இல்லாத காரணத்தால் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டார். இதனால், அவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.
2 அரைசதம்
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் ஆடிய ராகுல், இரண்டு போட்டிகளில் 89, 81 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். எனினும், இதை வைத்து ராகுல் பார்முக்கு வந்து விட்டார் என கூற முடியாவிட்டாலும், அணியில் மீண்டும் வாய்ப்பு பெறலாம்.
அணியில் இடம் பிடிப்பாரா?
எனினும், ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில், ராகுல் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது உள்ள சூழலில் ராகுல் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
மூன்றாவது துவக்க வீரர்
இந்திய அணியில் தற்போது மூன்றாவது துவக்க வீரராக யாரும் இல்லை. உலகக்கோப்பை அணிக்கு மாற்று துவக்க வீரர் என்ற இடத்திற்கு ராகுலை அனுபவ வீரர்கள் வேறு யாரும் இல்லை. இந்த காரணத்துக்காக ராகுல் ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
ரன் குவிக்க வேண்டும்
ஆனால், உலகக்கோப்பைக்கு ராகுல் செல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய தொடரில் சதம், அரைசதம் என ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். அதுவும் தொடர்ந்து தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ரன் குவிக்க வேண்டும். ஒரு வேளை ராகுல் தன்னை நிரூபிக்கவில்லை என்றால் ரிஷப் பண்ட் அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.