
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்திய கிரி்க்கெட் அணிக்கு மற்றொரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி முதுகு வலியால் அவதிப்படுகிறார்.
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.

இநத நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாளில் முதுகு வலியால் கேப்டன் விராட் கோஹ்லி அவதிப்பட்டார். அதையடுத்து பீல்டிங் செய்யாமல் வெளியேறினார்.
இந்த நிலையில் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இந்தியா பேட்டிங் செய்தது. வழக்கமாக மூன்றாவது வீரராகக் களமிறங்கும் கோஹ்லி, நேற்று நான்காவது வீரராகக் களமிறங்கினார்.
பேட்டிங் செய்யும்போதும், முதுகு வலியால் அவர் பாதிக்கப்பட்டார். ரன் எடுக்க ஓட முடியாமலும் திணறினார்.
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வரும் 18ம் தேதி துவங்குகிறது.
இந்தப் போட்டியில் கோஹ்லி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளது. தயாராகிவிடுவேன் என்று கோஹ்லி கூறியுள்ளார்..