டெல்லி: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகளுக்கான அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அவரால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்து செல்கிறது. அங்கு மூன்று டி-20 போட்டிகள், மூன்று ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முன்னதாக ஜூன் 27 மற்றும் 29ம் தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில், ஜூன் மாதத்தில், இங்கிலாந்து கவுன்டி அணியான சுர்ரே அணிக்காக விளையாடுகிறார் கேப்டன் விராட் கோஹ்லி. அதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஜூன் மாதம் முழுவதும் சுர்ரே அணிக்காக விளையாட கோஹ்லி ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ஜூன் 25 முதல் 28ம் தேதி வரை யார்க் ஷயர் அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் சுர்ரே அணி பங்கேற்கிறது.
அதே நேரத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. ஒரு நேரத்தில் இரண்டு இடங்களில் கோஹ்லியால் எப்படி விளையாட முடியும்.
பிசிசிஐ ஒப்புதலுடன் கவுன்டி அணிக்காக விளையாட உள்ள நிலையில், அயர்லாந்து தொடர் குறித்து கோஹ்லியிடம் பேசப்பட்டதா என்பது குறித்தும் விளக்கம் இல்லை. அதனால், அயர்லாந்து தொடரில் கோஹ்லி விளையாடுவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.