மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணி பலமாக விளங்கினாலும், அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சோகம் நிலவி வருகிறது. சோகம் என்பதை சொல்வதை விட, சாபம் என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும்.
சிஎஸ்கே அணி தங்களது முதல் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற, அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தது.ஆனால் மும்பை அணிக்கு அந்த தங்க நிற கோப்பையில் கை வைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து 4 முறை ஒற்றை படை ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை மும்பை அணியின் கண்ணாடி அலமாரியை அலங்கரிக்க சென்றுவிடும்.
அதன் பிறகு, இந்த நடைமுறையையும் 2020 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி உடைத்தது. அதன் பிறகு 2 ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை என்பது தனி கதை. ஆனால் மும்பை அணியால் கடந்த 10 ஆண்டுகளாக உடைக்க முடியாத சாபம் ஒன்று உள்ளது.

அது, மும்பை அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதே கிடையாது. கடைசியாக 2012ஆம் ஆண்டு மும்பை அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி தான். நாளடைவில் மும்பை அணி ரசிகர்களே, முதல் ஆட்டத்தில் தோற்றால் தான் பா நமக்கு உண்மையான லக் என்ற மனநிலைக்கு சென்றுவிட்டனர்.
இதனால், இன்று சொந்த மண்ணில் களமிறங்கும் ஆர்சிபி அணியை மும்பை வெல்லுமா, இல்லை மும்பை அணிக்கு இம்முறை சோகம் காத்திருக்கிறதா என்று இரவு தெரிந்துவிடும். எனினும் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள டிம் டேவிட், பிரவீஸ் போன்ற வீரர்களுக்கு பந்து பேட்டிற்கு வந்தால் , அதிரடியாக ஆடக் கூடியவர்கள் அப்படி ஒரு மைதானம் தான் சின்னசாமி மைதானம் என்பதால் மும்பை அணிக்கு வாய்ப்பில்லாமல் இல்லை.