லாகூர்: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி தற்போது புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்குமா என்பது குறித்து மோஷின் நக்வி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நாங்கள் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோமா அல்லது மாட்டோமா என்பதை பாகிஸ்தான் அரசுதான் முடிவு செய்யும். எங்கள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் நாடு திரும்பியதும் இது குறித்து ஆலோசனை நடத்துவோம். அரசு எடுக்கும் முடிவே இறுதியானது."
"ஒருவேளை அரசு அனுமதி மறுத்தால், ஐசிசி எங்கள் இடத்திற்கு வேறு அணியை அழைத்துக் கொள்ளலாம்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உள்விவகாரத் துறை அமைச்சராகவும் இருக்கும் நக்வி இப்படி கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பேசிய அவர், "எங்களிடம் திட்டம் ஏ, பி மற்றும் சி என மாற்று ஏற்பாடுகள் தயாராக உள்ளன. நேரம் வரும்போது அதனைப் பயன்படுத்துவோம். ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்தில் இதுபோன்ற சூழல்களை நாங்கள் கையாண்டுள்ளோம். அதனால் இதில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று ஐசிசிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கதேச அணி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டது குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்த நக்வி, ஐசிசியைக் கடுமையாகச் சாடினார். "வங்கதேசம் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான அங்கம். இந்த விவகாரத்தில் அவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்காகப் போட்டி நடைபெறும் இடங்களை மாற்றும் ஐசிசி, வங்கதேசத்திற்கு மட்டும் ஏன் மாற்ற மறுக்கிறது? ஒரு குறிப்பிட்ட நாடு மட்டும் ஐசிசியை ஆட்டிப்படைக்கிறது" என்று இந்தியாவை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே வங்கதேச அணி வெளியேறிய நிலையில், தற்போது பாகிஸ்தானும் பங்கேற்பது சந்தேகம் என்று கூறியிருப்பது ஐசிசிக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இது டி20 உலகக்கோப்பை தொடருக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தான் அதிக பாதிப்பா? என்ற விவாதம் எழுந்துள்ளது.