பல கேள்விகள்
அப்படிப்பட்ட புஜாராவை இப்போது வலை வீசித் தேடும் நிலையில் உள்ளது இந்திய அணி. வெளிநாடுகளில் இதுவரை மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா அடித்துள்ள ரன்கள் 2,640. ஆவரேஜ் 37.71. அதிகபட்ச ஸ்கோர் 193. இது அவரது கடந்த 10 ஆண்டுகால டிராக் ரெக்கார்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் பல கேள்விகளை எழுப்புகிறது. அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ஆவரேஜ் 26.93
ஆம்! கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 431 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 26.93. அதிகபட்ச ஸ்கோர் 77. இதில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 4 டெஸ்ட் - 271 ரன்கள்
நியூசிலாந்துக்கு எதிராக - 2 டெஸ்ட் - 100 ரன்கள்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக - 2 டெஸ்ட் - 60 ரன்கள்
40 கூட அடிக்கலையே
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டியில் புஜாரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மிக பொறுமையாக விளையாடினாலும், அணிக்கு ஓரளவுக்கு தேவையான பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளில் 15 ரன்கள் என மொத்தமாகவே 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இவர் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கொண்டு 40 ரன்கள் அடித்திருந்தால் கூட, இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கலாம்.
மன அழுத்தம்
இங்கிலாந்தின் ஜோனதன் ட்ராட் எனும் அபார டெஸ்ட் பிளேயரை உங்களுக்கு நினைவிருக்கலாம். இரண்டு புஜாராவுக்கு சமம். அவரை அவுட்டாக்க பவுலர்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். ஆனால், திடீரென மன அழுத்தத்தில் சிக்கிய ட்ராட், 2013 நவம்பரில் ஆஷஸ் தொடரில் இருந்து வெளியேறினார். மீண்டும், 2015 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து அணிக்குத் திரும்பினார். ஆனால் அவரால் பழையபடி விளையாட முடியாமல் போக, அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் 2015ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இப்போதைய தேவை
இப்போது அப்படியொரு மன அழுத்த சிக்கலில் புஜாரா சிக்கியிருப்பதாகவே தெரிகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாத நிலை அவரை மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்படுத்துவதாகவே எண்ணத் தோன்றுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு, பலரும் அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இன்று வேண்டுமானால் அவர் தடுமாறலாம். ஆனால், புஜாரா போன்ற ஒரு இன்டென்ட் உள்ள பேட்ஸ்மேனை கண்டறிவது மிக மிக கடினம். இந்தியாவின் ட்ராட்-ஆக புஜாரா உருவாவதற்கு முன்பு, கேப்டன் விராட் கோலியும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் புஜாராவுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டியதே இப்போதைய தேவை.