
ராஜினாமா செய்த கும்ப்ளே
ஆம்! இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. கேப்டன் விராட் கோலிக்கு மிக நெருக்கமானவர். எந்த அளவுக்கு நெருக்கம் தெரியுமா? அதை அறிய லைட்டா ஒரு ஃபிளாஷ்பேக் போகலாம். டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை, கடந்த 2017ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆலோசனைக் குழு
அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ-யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து, புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேர்வு செய்தது.

நேர்காணல்
வீரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ், டோத்தா கணேஷ், ரவி சாஸ்திரி, வெங்கடேஷ் பிரசாத், லான்ஸ் குளூஸ்னர், ராகேஷ் ஷர்மா, ஃபில் சிம்மன்ஸ், உபேந்திரநாத் பிரம்மாச்சாரி ஆகியோர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இதில் ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, சிம்மன்ஸ், பைபஸ், ராஜ்புட் ஆகிய ஆறு பேரிடம் மட்டுமே, கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் நடத்தியது.

ஒரு கோப்பை கூட
இதன்பிறகு, விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்றதில் இருந்து இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட ஐசிசி முக்கிய டைட்டில்களை வென்றதில்லை. அதாவது, 2019 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகிய இரு தொடரிலும் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.

மொத்த வித்தை
அதேசமயம், தற்போது இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதில், தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினார் எனலாம். ஏனெனில், இன்று இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வரும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து செதுக்கியவர் ராகுல் டிராவிட்.

உலகக் கோப்பை
இந்திய அணியின் 'எதிர்கால விக்கெட் கீப்பர்' , 'தோனிக்கு மாற்று' எனும் நம்பிக்கையை ஓரளக்காவது விதைத்திருக்கும் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி என்று இவர் விதைத்த விதைகள் ஏராளம். அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது.

டிராவிட் vs சாஸ்திரி
ஆகையால், டிராவிட் போன்ற ஒரு மெகா பவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. "இந்தியாவில் தனது பயிற்சித் திறமையினால் ராகுல் திராவிட் வலுவான இளம் வீரர்கள் உடைய நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்" என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் சமீபத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர், "இளம் வீரர்களைத் திறமையான அளவில் உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. நல்ல அடித்தளம் இந்த இரு நாடுகளில் உருவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், ஆஸ்திரேலியர்களின் மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் இளம் வீரர்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கிவிட்டார்" என்றார்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
இப்படிப்பட்ட பெருமையுடனும், எதிர்ப்பார்ப்புடனும் தான் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவிருக்கிறார். இத்தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், எதிர்காலத்தில்.. குறிப்பாக வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி என்ன வேண்டுமானாலும் மாற்றங்கள் நிகழலாம்.


Click it and Unblock the Notifications