இருவர் மட்டும்
ஜூன் 22ம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி உள்ளது. இந்த நிலையில், ஜுலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். அதேசமயம், இந்திய 'பி' டீம் இத்தொடரில் பங்கேற்கும் என்றும் கூறினார். சீனியர் வீரர்களில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவர் மட்டுமே இத்தொடரில் பங்கேற்கின்றனர். மற்ற அனைத்து வீரர்களும் ஜுனியர்கள் தான்.
புதிய அத்தியாயம்
இந்த நிலையில், இலங்கை தொடருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்று கடந்த இரு தினங்களாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு வர, இதுவரை பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், இதுவரை ஒப்புக்கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை. ஒருவேளை உண்மையில், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், அது ஒரு புதிய அத்தியாயத்தில் தொடக்கமாக இருக்கலாம்.
மெகா பவர்
ஏனெனில், இன்று இந்திய அணியின் எதிர்காலங்களாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஐபிஎல் ஸ்டார்ஸ்களாக ஜொலிக்கும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து உருவாக்கியவர் ராகுல் டிராவிட். இன்று இந்திய அணியின் 'ஃபியூச்சர் விக்கெட் கீப்பர்' எனும் நம்பிக்கையை அழுத்தம்திருத்தமாக விதைத்திருக்கும் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி என்று இவர் விதைத்த விதைகள் ஏராளம். அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது. ஆகையால், டிராவிட் போன்ற ஒரு மெகா பவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
வெடித்த மோதல்
இந்த சூழலில் தான் இலங்கைத் தொடருக்கு டிராவிட் பயிற்சியாளர் என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தி ஒருவேளை உண்மையாகுமெனில், அது விராட் கோலிக்கே மறைமுக எச்சரிக்கையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு மிக மிக நெருக்கமானவர். 2017ம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே-வை 'எங்களை ஸ்கூல் பிள்ளைகள் போல் நடத்துகிறார்' என்று குற்றச்சாட்டு வைத்தவர் கோலி. இதனால் கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் வெடிக்க, தானாக பதவி விலகினார் கும்ப்ளே. போகும்போது, "கடந்த ஒருவருடமாக இந்திய அணி பெற்ற வெற்றிக்கு கேப்டனும், சக வீரர்களுமே முழு காரணம்" என்று பாராட்டி தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
கப்சிப் மோடில் பிசிசிஐ
அதன்பின், கேப்டன் விராட் நடந்து கொண்ட விதம் தான் உண்மையில் குழந்தைத்தனமாக இருந்தது. 2016-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, கோலி தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார். அப்போதுதான், எந்தளவிற்கு கோலிக்கு கும்ப்ளே மீது வெறுப்பு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிந்தது. என்னதான் கோபம், வெறுப்புகள் இருந்தாலும், இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக கோலி நடந்து கொண்டது குறித்து பிசிசிஐ எதுவும் கருத்து கூறாமல் 'கப்சிப்' மோடிலேயே இருந்தது.
விட்டு வெளுத்த கவாஸ்கர்
இந்த விவகாரம் குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும். போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும். கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்" என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். அதன்பிறகு, வீரேந்திர சேவாக் பயிற்சியாளர் போட்டிக்கு விண்ணப்பித்திருந்தும், கேப்டன் கோலியின் முழு ஆசீர்வாதத்தோடு பயிற்சியாளர் ஆனவர் ரவி சாஸ்திரி. இந்த சூழலில், இந்திய 'பி' அணிக்கு டிராவிட் பயிற்சியாளரானால், அது ரவி சாஸ்திரி தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே பார்க்கப்படும். அதேபோல், அணியில் ஆளுமை செலுத்தி வரும் கேப்டன் விராட் கோலிக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும்.