மும்பை: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டார். இனி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதாக அவர் அறிவித்தார். இந்த நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வியை ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் கேட்டார். அதற்கு ரோஹித் சர்மா அளித்த பதிலால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். அதற்கு முன் பத்து ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்திருந்தார். இது போன்ற சாதனையை வேறு எந்த அணியின் கேப்டனும் செய்ததே இல்லை.

ஐபிஎல் தொடரில் மற்றொரு வெற்றிகரமான கேப்டனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூட 12 ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து, அதில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்து இருந்தார். அவருடன் ஒப்பிடும்போது ரோஹித் சர்மா கேப்டனாக குறைந்த ஆண்டுகளிலேயே அதிக கோப்பைகளை வென்று சாதனை படைத்திருந்தார்.
ஆனாலும், அணியின் எதிர்காலம் கருதி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ். அவருக்கு பதிலா ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதனால் ரோஹித் சர்மா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வேறு அணிக்கு செல்வார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
எனவே, இனி அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் ரோஹித் சர்மாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் அந்த கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், தான் நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று உறுதியாக கூறினார். ரோஹித் சர்மாவின் பதிலால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா? அல்லது வேறு அணிக்கு தாவுவாரா? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.