Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பைக் கிரிக்கெட் அணி-சில கேள்விகள்-சில புதிர்கள்!

Piyush Chawla and Sreesanth
சென்னை: 28 வருடங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண் முன்பு வந்து போய்க் கொண்டிருக்கும், உலகக்கோப்பையை வெல்லப் போகும் அணி இது என்ற பெருத்த அறிமுகத்துடன் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். ஆனால் இந்த அணியின் தேர்வு சில சர்ச்சைகளையும், சில குழப்பங்களையும், சில புதிர்களையும் ஏற்படுத்தியுள்ளது - வழக்கம் போல.

மற்ற கிரிக்கெட் போட்டிகளுக்கும், உலகக் கோப்பைப் போட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மற்ற கிரிக்கெட் தொடர்கள் இரு சண்டியர்களுக்கு இடையிலான மோதலாக இருந்தால், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி என்பது உலக நாயகர்களுக்கு இடையிலான மோதலாகும். ஒவ்வொருத்தரும் தீப்பொறியாக இருப்பார்கள். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒவ்வொரு அணியும் பக்காவான அணியை தேர்வு செய்தாக வேண்டும்.

அந்த வகையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாதுதான். இருந்தாலும் சில குழப்பங்கள் எழுந்திருப்பதை மறுக்கவும் முடியாது.

மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் என்று பார்த்தால் மொத்தம் 7 பேர் (டோணியையும் சேர்த்து) இடம் பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை 7 பேர் -நாலு பேர் வேகப் பந்து வீச்சாளர்கள், 3 பேர் ஸ்பின்னர்கள். ஆல் ரவுண்டர் ஒரே ஒருவர்தான் - அவர் யூசுப் பதான். விக்கெட் கீப்பர் டோணி மட்டுமே- ஸ்பேராக யாரும் சேர்க்கப்படவில்லை.

இதில் சச்சின், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகிய நால்வரும் பார்ட் டைம் ஸ்பின்னர்களாகவும் உள்ளனர்.

இதுதான் இந்திய அணி. முதலில் சாதக அம்சத்திற்கு வருவோம்.

டோணி கேப்டன் என்பதே முதலில் இந்தியாவுக்குப் பெரிய சாதகமான விஷயம்தான். ரன் மெஷின்களாக கருதப்படும் சச்சின், கம்பீர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா ஆகிய நால்வருமே அட்டகாசமான பார்மில் உள்ளனர். மேலும் ஸ்பின் பவுலிங்கை கபளீகரம் செய்வதில் வல்லவர்கள் இவர்கள். உலகக் கோப்பை போட்டிகள் நடக்கப்போகும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் மூன்றுமே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இடங்கள் என்பதால் இவர்களது ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

விராத் கோலியும் நல்ல பார்மில் இருக்கிறார். யுவராஜ் சிங்கும் பார்முக்குத் திரும்பியுள்ளார். மேலும் மு்நதைய அனுபவமும் யுவராஜுக்கு கை கொடுக்கும்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை ஜாகிர்கான் அட்டகாசமாக இருக்கிறார். அதேபோல முனாப் படேல், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ராவும் நன்கு பந்து வீசக்கூடியவர்கள். முனாப் படேல் தென் ஆப்பிரிக்க பயணத்தில் அசத்தினார்.

ஒரே ஒரு ஆல் ரவுண்டராக அணியில்இடம் பெற்றுள்ள யூசுப் பதான் உண்மையிலையே அணிக்கு தனி வேல்யூவைக் கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பின்னி எடுத்தவர் யூசுப் பதான். அது மட்டுமல்லாமல், நெருக்கடியான நேரத்தில் பிரமாதமாக ஆடக் கூடியவரும் கூட. கேப்டன் தன் மீது வைக்கும் நம்பிக்கையை காப்பாற்றக் கடுமையாக போராடக் கூடியவர், கடினமான உழைப்பாளியும் கூட. எனவே யூசுப் பதானின் இருப்பு, இந்தியாவுக்கு நிச்சயம் பிளஸ்தான்.

சுழற்பந்து வீச்சின் கோட்டைக்குள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறப் போவதால் ஹர்பஜன் சிங்குக்கு நிறைய வேலை. அவரும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். முரளிதரனே ஹர்பஜனை வெகுவாகப் பாராட்டியுள்ளார். எனக்கு அடுத்து ஹர்பஜன்தான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.அவருக்கு உறுதுணையாக அஸ்வினும், பியூஸ் சாவ்லாவும் இருப்பார்கள் என நம்பலாம். ஐபிஎல் போட்டிகளில் பட்டாசாக பந்து வீசியவர் அஸ்வின்.

இப்போது குறைகளைப் பார்க்கலாம்.

- ஏற்கனவே நான்கு பார்ட் டைம் ஸ்பினர்கள் இருக்கும்போது எதற்காக 3 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய தேர்வுக் குழு எடுத்தது என்பது புரியவில்லை.

- பியூஸ் சாவ்லா ஆக்டிவ் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி ரொம்பகாலமாகி விட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கும் மேலாக எந்த பெரிய தொடரிலும் அவர் ஆடவில்லை.

- ஸ்ரீசாந்த் சமீப காலமாக பிரமாதமாக பந்து வீசி வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், முன்பை விட சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரை ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை, நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அவர் மீது கேப்டன் டோணி அதிருப்தியுடன் இருப்பதே காரணமாக கருதப்படுகிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார் ஸ்ரீசாந்த்.

டெஸ்ட் தொடரின்போது அவர் ஆக்ரோஷமாக பந்து வீசியதையும், எதிரணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் தொடர்ந்து, டிரஸ்ஸிங் ரூமில் வைத்து ஸ்ரீசாந்த்தை கடுமையாக டோணி திட்டியதாகவும், இதையடுத்து ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுததாகவும் செய்திகள் வெளியாகின. இதெல்லாம் சேர்ந்துதான் தற்போது ஸ்ரீசாந்த்துக்கு வேட்டு வைத்து விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

- உலகக் கோப்பைப் போட்டிகள் 3 நாடுகளில் நடைபெறவுள்ளது. நீண்ட காலம் நடைபெறும் தொடராகும் இது.அப்படி இருக்கையில் ஒரு பேக்கப் விக்கெட் கீப்பர் தேவை என்பதை ஏன் கிரிக்கெட் தேர்வுக் குழு உணரவில்லை. டோணியால் பல பொறுப்புகளையும் சமாளிக்க முடியுமா என்பதை ஏன் தேர்வுக் குழு கவனத்தில் கொள்ளத் தவறியது என்பது தெரியவில்லை. ஒன்று பார்த்திவ் படேலை எடுத்திருக்கலாம் அல்லது திணேஷ் கார்த்திக்கை தேர்வு செய்திருக்கலாம்.

- உலகக் கோப்பைப் போட்டி என்பது ஆல்ரவுண்டர்களின் ஆட்டம் என்பார்கள். காரணம், இது உச்சகட்ட போட்டி என்பதாலும், கெளரவம் சம்பந்தப்பட்டது என்பதாலும் ஆல் ரவுண்டர்கள் இருந்தால் அணிக்கு மிகப் பெரிய பலம். எனவே யூசுப் பதானைப் போல மேலும் ஒரு ஆல்ரவுண்டர் இந்தியாவுக்கு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதெல்லாம் சின்னச் சின்னக் குறைகள்.

இந்திய அணி இடம் பெற்றுள்ள போட்டிப் பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய பலம் வாய்ந்த அணிகளும், வங்கதேசமும் இடம்பெற்றுள்ளன. எனவேதான் பந்து வீச்சுக்கு இந்திய தேர்வுக்குழு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை சமாளிப்பது மிகக் கடினமான வேலை. அதிலும் இங்கிலாந்து பயமுறுத்தும் வகையில் தற்போது ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணி சிறந்தது, இது கோப்பையை வெல்லும் என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல கேப்டன் டோணியும் அணித்தேர்வு குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார்.

அணியைத் தேர்வு செய்தாகி விட்டது. நிறையோ, குறையோ, அதை பேசிக் கொண்டிருப்பது இனி சரியாக இருக்காது. போட்டிகள் ஆரம்பித்து, முடியும் வரை எந்த வீரரும் காயமடைந்து விடாமல் 'பிட்'டாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது ரொம்ப முக்கியமானது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+