இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, முறையே மே 12 மற்றும் மே 7 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2025 ஏப்ரலில் வெளியிட்ட வருடாந்திர ஒப்பந்த பட்டியலில், கோலி மற்றும் ரோஹித்தை A+ தரத்தில் உள்ளடக்கியது.
இருவரும் A+ தர ஒப்பந்தத்தில் தொடர்வார்களா என்று பல ஊகங்கள் எழுந்தன. அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரையிலான ஒப்பந்த காலத்திற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. பொதுவாக, மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A+ ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

இரு வீரர்களும் இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாளில் விளையாடுகின்றனர், எனவே A+ தரத்தில் இல்லை என்ற கேள்வி எழவே இல்லை. இந்த நிலையில், தற்போது இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவதால் சம்பளத்தை குறைக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. ஆனால், இருவரும் ஜாம்பவான்கள் என்பதால், அப்படி ஒரு முடிவை பிசிசிஐ எடுத்தால், அது ரசிகர்களை கோபப்படுத்தும் செயலாக தான் இருக்கும்.
தற்போதைய ஒப்பந்த சுழற்சியில், கோலி மற்றும் ரோஹித்துடன், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் A+ தரத்தில் உள்ளனர். ஒருநாள் வடிவத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள இந்த அனுபவமிக்க ஜோடி, அடுத்த 3 வருடத்தில் வெறும் 27 ஒருநாள் போட்டிகள் தான் விளையாட போகிறது. கோலி மற்றும் ரோஹித் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்து பயணத்தில் எவ்வாறு செயல்படும் என்பது ஆர்வத்தை தூண்டுகிறது. ஜூன் 20 முதல் தொடங்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க முன்னிலையில் உள்ளார்.
கோலி மற்றும் ரோஹித்தின் ஓய்வு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. இளம் வீரர்களை மையமாகக் கொண்டு அணியை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த மாற்றம், இந்திய அணியின் எதிர்காலத்தில் எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரசிகர்கள் இந்த புதிய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.