தூள் கிளப்பிய யுவராஜ் சிங்.. இனியாவது தேர்வாளர்கள் மனம் இரங்குமா?
டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு யுவராஜ் சி்ங்குக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்து தொடருக்கு யுவராஜ் சிங் பரிசீலிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோருக்கு வாய்ப்பளித்து யுவராஜ் சிங்கைக் கிடப்பில் போட்டது தேர்வாளர் குழு.
தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளுக்கான அணியை விரைவில் இந்தியத் தேர்வாளர்கள் முடிவு செய்யவுள்ளனர். அதில் யுவராஜ் சிங்குக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யுவராஜ் அதிரடி
அக்டோபர் 14ம் தேதி பன்சிலால் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக நடந்த ரஞ்சிக் கோப்பைப் போட்டியில், யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி 177 ரன்களைக் குவித்தார். இதில் 24 பவுண்டரிகளும் அடக்கம். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேர்வாளர்கள் கவனம்
யுவராஜ் சிங்கின் இந்த சிறப்பான ஆட்டம் நிச்சயம் தேர்வாளர்களைக் கவர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிச்சயம் யுவராஜ் சிங்குக்கு கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ராஞ்சி- விசாகப்பட்டனம்
இந்தியா நியூசிலாந்து இடையிலான 4வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. கடைசி மற்றும் 5வது போட்டி விசாகப்பட்டனத்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை நாயகன்
2011 உலகக் கோப்பைப் போட்டியின் ஹீரோவான யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட், 293 ஒரு நாள் போட்டிகள், 55 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். கடைசியாக அவர் ஆடிய போட்டி கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டிதான்.


Click it and Unblock the Notifications